சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்றுமுதல் தொடங்குகிறது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது.  வரும்  28-ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நடப்பாண்டு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த 1ந்தேதி தொடங்கியது. முதல்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கு நடைபெற்ற கலந்தாய்வு 6ந்தேதியுடன் முடிவடைந்தது.  இதில், விளையாட்டுப்பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 500 இடங்களில் 277 இடங்களும், முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 150 இடங்களில் 122 இடங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ஒதுக்கப்பட்ட 6 ஆயிரத்து 785 இடங்களில் 98 இடங்களும் நிரம்பி இருக்கின்றன.
காலியாக உள்ள சிறப்பு பிரிவில்உள்ள  இடங்கள் பொதுப்பிரிவு இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.  இதற்கான அட்டவணையை தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை (டிஎன்இஏ.) இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி, 1லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவ-மாணவிகளுக்கான இடங்கள் உள்ளன.  இந்த கலந்தாய்வு 4 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 முதல் 12 ஆயிரத்து 263 தரவரிசையில் (கட்-ஆப் 199.667 முதல் 175 வரை) இருக்கும் மாணவர்களுக்கு 8-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரையிலும்,
12, 264 முதல் 35, 167 வரையிலான தரவரிசையில்(கட்-ஆப் 174.75 முதல் 145.5 வரை) உள்ள மாணவர்களுக்கு 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும்,
35,168 முதல் 70 ,300 வரையிலான தரவரிசையில்(கட்-ஆப் 145 முதல் 111.75 வரை) இருப்பவர்களுக்கு 16-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையிலும்,
70 , 301 முதல் 1 ,10 ,873 தரவரிசை(கட்-ஆப் 111.5 முதல் 77.5 வரை) வரையில் உள்ளவர்களுக்கு 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 8-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி நிறைவு பெற உள்ளது.