பல்லடத்தில் மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் பலியானது எப்படி என்பது குறித்து உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு வெங்கடாசலபதி, முத்துக்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். வெங்கடாசலபதி அந்த பகுதியில் சொந்தமாக ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். முத்துக்குமார் கொடுவாயில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று அண்ணனின் ஒர்க்ஷாப்பில் முத்துக்குமார் தனது மோட்டார் சைக்கிளை வாட்டர் சர்வீஸ் செய்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் முத்துக்குமார் தூக்கி வீசப்பட்டார்.அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பல்லடம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மேல் சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முத்துக்குமாரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.