சென்னை:

பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவிற்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது.

சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் வரும் கல்வியாண்டில் உயர்த்தப்படும்  தெரிவித்திருந்தார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசும்போது, அண்ணா பல்கலைக்கழகத்துக்குள்பட்ட உறுப்புக் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் (2019-2020) கட்டணம் உயர்த்தப் படும். இந்த முடிவுக்கு பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு இருப்பதாகவும்,  மாறி வரும் பொருளாதார சூழலுக்கு ஏற்றவாறு கட்டண உயர்வு இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

மாணவர்களின் குடும்பச் சூழல் உள்பட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டே புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டணம் மாணவர்கள் சிரமப்படாமல் செலுத்தும் வகையில் இருக்கும் என்றார்.

அதன்படி செமஸ்டருக்கு ரூ.10,000 வரை கட்டணத்தை உயர்த்துவதற்கு அண்ணா பல்கலைக் கழகம் முடிவு எடுத்திருந்தது.

சமீப காலமாக தமிழக அரசுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் இடையே முட்டல் மோதல் நடைபெற்று வரும் நிலையில், இந்த கல்வி ஆண்டு முதல் பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாது என்று துணைவேந்தர் சூரப்பா அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்ட உயர்வு முடிவுக்கு தமிழக அரசு தடை விதித்துளளது முட்டுக்கட்டை போட்டுள்ளது.

அரசு பொறியியல் கல்லூரிகளில் கட்டண உயர்வு இருக்காது என உயர்கல்வித் துறை கூறி உள்ளது.