அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், 65 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது இங்கிலாந்து.

இன்னும் 95 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜோ ரூட்டுடன், 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த போப், நிலைத்துநின்று ஆடுவார் என்று கருதப்பட்டது. அஸ்வின் பந்தில் ஒரு சிக்சரெல்லாம் அடித்தார். ஆனால், 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவசரப்பட்டு அக்ஸார் பந்தில் இறங்கி ஆட முயன்று ஸ்டம்பிட் செய்யப்பட்டார்.

அவர் சென்ற சிறிதுநேரத்தில், அஸ்வின் பந்தில் எல்பிடப்ள்யூ ஆகிவிட்டார் 30 ரன்களை அடித்தருந்த கேப்டன் ஜோ ரூட். முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ் தவிர, மற்ற 7 இன்னிங்ஸ்களிலும், இவர் சரியாக ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த இன்னிங்ஸில் அரைசதம் அடித்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அக்ஸாரின் பந்தில் அவுட்டானார். தற்போது, டான் லாரன்ஸ் மற்றும் பென் போக்ஸை நம்பியுள்ளது இங்கிலாந்து.

இந்திய அணியில், தற்போதுவரை, அஸ்வின் & அகஸார் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.