புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மோடி அரசு, அதன் பங்குகளை வாங்குவதற்கான தங்களின் விருப்பத்தை சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிப்பதற்கான(இஓஐ) காலக்கெடுவை அக்டோபர் 30ம் தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு.

தற்போதைய கொரோனா சூழலைக் காரணம் காட்டி, ஏலம் எடுக்க விரும்புவோர், விருப்பத்தை தெரிவிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டதற்கிணங்க, அக்டோபர் 30 வரை நீட்டிக்கப்பட்டதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, தகுதியுள்ள ஏலதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கும் தேதி செப்டம்பர் 14 என்பதிலிருந்து நவம்பர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், விருப்பம் தெரிவிக்கும் தேதி மார்ச் 17 என்பதாக இருந்து, பின்னர் ஏப்ரல் 30க்கு ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் ஜுன் 30க்கு தள்ளிச் சென்று, பிறகு ஆகஸ்ட் 31 என்றானது. தற்போது அக்டோபர் 30க்கு சென்றுள்ளது.