டெல்லி: நடப்பாண்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 8.5% வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை இபிஎஃப் துறைக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2019-20 நிதி ஆண்டில் 8.5 சதவீத வட்டி வழங்கவும், அந்த வட்டியை தொழிலாளர்களின் கணக்குகளில் செலுத்தி விடுமாறு இ.பி.எப். அமைப்புக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதன்மூலம்  6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெறுவார்கள் என்றும் குறிப்பிடப்ட்டு உள்ளது.

இதுபற்றி தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார் கூறுகையில், “2019-20 நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மீது 8.5 சதவீத வட்டி வழங்குவது எங்கள் முயற்சி ஆகும். இதற்கான அறிவிக்கையை நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். ஆனால், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, அதை அளிக்க முடியவில்லை. இதனால், தற்போது தொழிலாளர்களின் கணக்குகளில் இந்த வட்டித்தொகையை செலுத்துவதற்கான செயல்முறை தொடங்கி உள்ளது” என குறிப்பிட்டார்.

இந்த தொகையில், 8.15% கடன் வருமானத்தில் இருந்தும், 0.35% பரிவர்த்தனை-வர்த்தக நிதிகள் (ப.ப.வ.நிதிகள்) விற்பனையிலிருந்து மூலதன ஆதாயங்களிலிருந்தும் வந்தன, என்றும் தெரிவித்துள்ளார்.