ஜி.ஜி. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. சேனனாயகா, எம். திருச்செல்வம்
ஜி.ஜி. பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம் , எம். திருச்செல்வம்

 
சில முணுமுணுப்புக்களிடையேயும் இனவாரி பிரதிநிதித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த டொனமூர் சட்டம் டிசம்பர் 1929ல் நிறைவேறியது.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக அமலில் இருந்த பிரநிதித்துவ முறையை படிப்படியாகக் மாற்றியிருக்கலாம், பல பிரச்சினைகளை தவிர்த்திருக்கலாம். ஆனாலும், சட்ட மேலவையில் தங்களுக்கான இடங்கள் கணிசமாகக் குறையவிருந்ததென்றாலும்,  தமிழர்கள் அமைதியாகவே புதிய சட்டத்தினை ஏற்றுக்கொண்டார்கள்.
வைத்தியலிங்கம் துரைசாமி எனும் சட்ட அவை உறுப்பினர் குறிப்பிட்டார்: “இப்படிப்பட்ட பிரதிநிதித்துவத்தை உருவாக்கியது காலனீய ஆட்சியாளர்கள்தான். இப்போது அவர்களாகவே அதற்கு முடிவுகட்டுகின்றனர்…இதற்கு தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பேதும் இல்லை……”
அந்த நேரத்தில் அவர் தமிழ்ச் சமூகத்தின் பொதுவான மன நிலையினை சரியாகவே கணித்திருந்தார் எனலாம்.
டொனமூர் அறிக்கையின்படி அமையவிருந்த புதிய சட்ட அவைக்கு 1931ல் தேர்தல்கள் நடைபெற்றன.
சுயாட்சி பற்றி பேசாத அவ்வறிக்கையின் ஆலோசனைகள் பேரில் நடைபெறும் தேர்தல்கள் புறக்கணிக்கப்படவேண்டும் என்ற இடையறா இளைஞர் காங்கிரஸ் பிரச்சாரத்தின் விளைவாய், யாழ்ப்பாணம், காங்கேசன் துறை, கைட்ஸ் மற்றும் பருத்திமுனை தொகுதிகளுக்கு எவரும் மனுச் செய்யவில்லை.
இன்னும் வேறு ஒன்பது தொகுதிகளில் ஒரே ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க, அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இப்படி தமிழர் மத்தியில் சுயாட்சிக்கான எழுச்சியையும், இனரீதியான பார்வையினை நிராகரிக்கும் போக்கினையும் நாம் காணமுடிகிறது. ஆனால் அந்த நிலை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றபோது, தமிழர், சிங்களர் இரு தரப்பாரிலுமே இன வெறிக்கூச்சல்கள் எழுந்தன.
இனவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் தமிழர்கள் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட, தமிழர்கள் இன ரீதியாக நம்முடன் மோதுகின்றனர் என சிங்களர் சிலர் முழங்க, பதிலுக்கு இதுதான் சிங்கள ஆதிக்கம் என தமிழ்த் தரப்பில் ஆத்திரப்பட, இன உறவுகள் மோசமடைந்தன.
மேலே குறிப்பிட்ட துரைசாமியைத் தவிர மற்ற அனைத்து தமிழ் சட்ட அவை உறுப்பினர்களும் துவேஷப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர்.
ஜி ஜி பொன்னம்பலத்தார் அதி தீவிர நிலைப்பாடு எடுத்து நீண்ட நேரம் ஆணைய அறிக்கையினை தாக்கிப்பேச மக்கள் இரையானார்கள்.
இளைஞர் காங்கிரஸ் அத்தகைய சிங்கள விரோதப் போக்கு மிகவும் ஆபத்தானது என எச்சரித்தது.
“சிங்கள விவசாயிகள் நிலப்பற்றாக்குறையின் காரணமாக கடும் வறுமையில் வாடுகின்றனர். இந்நாட்டின் தொழில் துறையோ ஐரோப்பியர்கள் மற்றும் இந்தியர்கள் கட்டுப்பாட்டில். தேங்காய் தொழில் ஒன்றுதான் சிங்களர்களால் நடத்தப்படுகிறது. ஆனால் தென்னந்தோப்புக்களில் 75 சதம் இந்திய முதலாளிகளிடம் அடகு வைக்கப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்களிலும் சரி மற்ற பல அறிவுசார் துறைகளிலும் சரி சிங்களர்கள் அடித்தட்டிலேயே இருக்கின்றனர்.
தங்கள் பின் தங்கிய நிலையினை அவர்கள் உணரத்துவங்கிவிட்டனர், தங்களுக்கு உரிய அந்தஸ்துவேண்டுமெனவும் கோருகின்றனர், சற்று காரமாகவே, ஆவேசமாகவே.
“இத்தகைய சூழலில் தமிழர்கள் சரி சம பிரதிநிதித்துவம் என்று வலியுறுத்தினால் சிங்களர் தரப்பில் தீவிர இனவாதம் தலையெடுக்கும்.
“யதார்த்தம் என்னவெனில் 50:50 என விகிதாச்சாரம் அமலில் இல்லையெனில் என்னாகுமோ என தமிழர்கள் மத்தியில் சில நியாயமான அச்சங்கள் ஏற்படலாம். ஆனால் அத்தகைய பிரதிநிதித்துவத்திற்கு முடிவு கட்டியிருப்பதால் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாகக் கூறமுடியாது.
ஈ.டபிள்யூ. பெரேரா
ஈ.டபிள்யூ. பெரேரா

”அதே நேரம் அவர்கள் பெரும்பான்மையினராய் இருந்தும் சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கும்போது, அரசியல் பிரதிநிதித்துவத்தையும் சமமாக பங்கிட்டுக்கொள்ளச் சொல்வது, சிங்களர்களுக்கு மேலும் ஆத்திரமூட்டும்.  சிங்கள மஹா சபா போன்ற இன வெறி அமைப்புக்கள் அம்மக்களின் தலைமையைக் கைப்பற்றும். அது நாட்டுக்கு நல்லதல்ல….பாலஸ்தீனத்தில் கொண்டுபோய் யூதர்கள் காலனி ஒன்றை நிறுவியதன் விளைவாய், எப்படி அங்கே காலனீய ஆதிக்கத்திற்கெதிரான உணர்வுகள் சிறுபான்மை யூதர்களுக்கெதிரானதாகவும் உருப்பெற்றதோ, அதே போன்ற மோசமான நிலை இங்கும் ஏற்படலாம்” என இளைஞர் காங்கிரசின் ’மதவாதமா, இனவாதமா,’ என்ற பிரசுரம் தெளிவாகவே எச்சரித்தது.
ஆனால் நல்லதை யார் எப்போது கேட்டார்கள்? தோள் தட்டுவது இனப் பெருமை பேசுவது தமிழர் மத்தியில் தொடர்ந்து அதிகரித்தது.
ஜி ஜி பொன்னம்பலம் 1939 மே மாதம் கண்டி மாவட்டம் நாவலப்பிட்டியாவில் பேசும்போது, சிங்களர்களை பல இனக்கலப்பில் உருவானவர்கள் என ஏசினார்.
விளைவு அங்கே அடுத்த மாதமே எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயகா சிங்கள மஹாசபையின் கிளை ஒன்றைத் துவக்கினார்.
அப்போது அவர் பொன்னம்பலம் போன்றோர் நமக்கு எதிரிகளாவதால் நமக்கு நன்மையே என்றார் பூடகமாக.
பொன்னம்பலனார் எதிர்பார்த்திருக்கமுடியாத இன்னொரு திருப்பம், பிரிட்டிஷார் இலங்கையை விட்டு வெளியேறும்போது, இ டபிள்யூ பெரேரா போன்ற இடதுசாரிகள்,  முற்போக்காளர்கள், ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை.
ஜூன் 1915ல் சிங்களர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே மோதல்களை கட்டுக்குள் கொண்டுவருவதாகச் சொல்லி, ஆட்சியாளர்கள் கடும் அடக்குமுறையில் இறங்கினர், மனித உரிமைகள் மீறப்பட்டன, இது நிற்கவேண்டும் என பிரித்தானிய அரசுக்கு மனுச் செய்து வெற்றியும் கண்டவர் பெரேரா.
அதுவோ முதலாம் உலகப்போர் துவங்கியிருந்த நேரம். அப்போது இலங்கையை நிர்வகித்து வந்த ஆங்கிலேய அதிகாரிகளுக்கு எதிராக மனுச் செய்வது ஆபத்தான செயல். பெரேராவுக்கு எதுவேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.
அத்தகைய சூழலில் மக்கள் சார்பாக பிரிட்டிஷ் அரசரை அணுக அசாத்தியத் துணிச்சல் பெரேராவுக்கு இருந்திருக்கவேண்டும். இருந்தது, இறுதியில் நீதியையும் நிலை நாட்டினார். அது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு பெரும் மூக்குடைப்பு.
மேலும் அவர் டொனமூர் அறிக்கையினை நிராகரித்து சுயாட்சி கோரினார். அப்படிப்பட்டவரை எப்படி ஆட்சியாளர்கள் சகித்துக்கொள்வார்கள்?
அவர்கள் விரும்பியதைப் போலவே சிங்களர் மத்தியில் பிற்போக்குவாதிகள் வலுப்பெற்றனர். 1943ல் கெலனீயா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது பெரேராவை எதிர்த்து போட்டியிட்டவர் பின்னாளில் அதிபராகி, பெரும் கலவரத்தை மூட்டி, தமிழர் வாழ்வை நாசம் செய்த ஜே ஆர் ஜெயவர்த்தனாதான். பெரேரா கிறித்தவர், அந்நியர் என சிங்கள பௌத்தர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, ஜே ஆர் வெற்றி பெற்றார்.
ஜிஜி பிரிட்டிஷாரிடம் அநியாயத்திற்கு குழைந்து பார்த்தார். ஆண்டனி பிரேஸ்கர்டில் எனும் தொழிற்சங்கவாதி நாடுகடத்தப்பதை சட்டமன்றமே கண்டித்து தீர்மானம் இயற்றியபோது, நம்மவர், ஆஹா இப்படித்தான் அரசு நடந்துகொள்ளவேண்டும் கலகம் செய்பவர்கள் வெளியேற்றப்படத்தான்வேண்டும்  என்று வாழ்த்தினார். ஆனால் எதுவும் பலிக்கவில்லை.
50-50 கோரிக்கை நிறைவேறவில்லை. அந்தப் பக்கம் சிங்கள இனவாதம் வலுப்பெற்றது. பிரிட்டிஷார் எதையும் கண்டுகொள்ளவில்லை. தமிழர் நிர்கதிதான்.
ஒரு கட்டத்தில் கால் (Galle) பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழர்களுக்கு 40 சதம் ஒதுக்கலாம் என்ற அளவுக்கு இறங்கிவந்ததாகவும், ஆனால் 50:50 தான் வேண்டும் என்று தான் பிடிவாதமாக இருந்ததாகவும் பொன்னம்பலம் கூறினார். பேசாமல் அந்த 40ஐயாவது ஏற்றுக்கொண்டிருக்கலாம். பிரச்சினைக்கு தீர்வு வந்திருக்கும். அவர்  ரொம்ப முறுக்கிக் கொண்டது தமிழர்களுக்குத்தான் பின்னடவானது.
நாட்டு விடுதலைக்குப்பின் நடைபெற்ற முதல் பாரளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும், மிக அதிக இடங்களில் வென்றதால், தமிழர்கள் உட்பட வேறு தரப்பினரின் ஆதரவு பெற்று, ஆட்சி அமைக்க முடிந்தது.
அவ்வரசின் முதல்வேலையே மலையகத் தொழிலாளர்களின் குடி உரிமையினைப் பறித்ததுதான்
வேறொன்றுமில்லை. மலையகப்பகுதிகளிலிருந்து நாடாளுமன்றத்திற்கு எழுவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களும் தொழிற்சங்கவாதிகள். அங்கே மேலும் கம்யூனிசம் ஊடுருவக்கூடும் என்ற அச்சம்.
பிரிட்டிஷார் விட்டுச்சென்ற சோல்பரி சட்டமோ தோட்டத் தொழிலாளர் நிலை குறித்து கறாராக ஏதும் சொல்லவில்லை. அவர்கள் அந்நியர்கள், அவர்களுக்கெல்லாம் வாக்குரிமை கொடுத்தால் எங்கள் நிலை என்னாவது என்ற சிங்களரின் கவலைகள் புரிந்துகொள்ளக்கூடியதே என்று சோல்பரி ஆணையம் கூறியது.
இந்நிலையில்தான் தலைமுறை தலைமுறையாக அங்கே வாழ்ந்து வந்த   மலையகத்தினர் குடி உரிமை பெற சில கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன, குறிப்பாக இரு தலைமுறையாக அங்கே வாழ்ந்ததாக நிரூபிக்கவேண்டியிருந்தது. ஆனால் பிறப்புப் பதிவேடெல்லாம் முறையாக ஆவணப்படுத்தப்படாத அக்கால கட்டத்தில் தானும் தன் தந்தையும் அங்கேயேதான் பிறந்தவர்கள் என்று  நிரூபிக்கமுடியாமல் போய் 1948 சட்டத்தின் கீழ் ஒரே நாளில் லட்சக்கணக்கான மலையகத் தமிழர் நாடற்றோராயினர்.
ஜெயவர்த்தனே
ஜெயவர்த்தனே

பொன்னம்பலனார் இந்தக் கொடுமையான சட்டத்தைஆதரித்தார். அமைச்சராகவும் ஆனார்.
சிங்கள இடதுசாரிகள் மலையகத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தனர். அவர்களும் பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சியிடம் விலைபோனார்கள்.
சரி இளைஞர் காங்கிரசாவது அனைவர்க்கும் வாக்குரிமையை உறுதிசெய்த டொனமூர் அறிக்கையினை ஏற்றுக்கொண்டு, 1931 தேர்தல்களிலும் பங்கேற்றிருந்தால் இரு இனங்களுக்கிடையேயான ஒற்றுமை வலுப்பெற்றிருக்குமே?
ஆனால் அவர்களோ காலனீய அரசின் மேற்பார்வையில், பரந்துபட்ட  மக்கள் நலனைப் பேணாமல், வரி வசூலித்து, சட்டம் ஒழுங்கின் பெயரால், அடித்தட்டு மக்களை ஒடுக்கும் அரசு ஒன்று உருவாக, ஒத்துழைக்கப்போவதில்லை என்றனர்.
ஜவஹர்லால் நேரு தன் சுயசரிதையில் பிரிட்டிஷாரின் தலையீடு மட்டும் இல்லையென்றால், இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையிலான முரண்பாடுகளை எளிதில் தீர்க்கமுடியும் என்று கூறியிருப்பதையும் மதவாதமா, இனவாதமா என்ற வெளியீடு மேற்கோள் காட்டுகிறது.
உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க அந்நியரின் உதவியை நாடினால் என்னாகும் என்பதை நாளடைவில் இலங்கை நன்றாகவே உணர்ந்தது.
(மொழிபெயர்ப்பு: கானகன்)