ஸ்ரீநகர்
நாளை 28 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய பராளுமன்றக் குழு காஷ்மீருக்கு வருகிறது.
இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று விதி எண் 370 ஐ விலக்கிக் கொண்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அதையொட்டி கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். தொலை தொடர்பு மற்றும் இணையச் சேவை முடக்கப்பட்டது.
தற்போது லாண்ட் லைன் தொலைபேசி மற்றும் போஸ்ட் பேய்ட் அலைப்பேசி சேவைகள் அளிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் 144 தடை சட்டம் இன்னமும் அமலில் உள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தியின்மகள் இல்திஜா இதை கடும் பொய் என மறுத்துள்ளார்.
இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பாராளுமன்றக் குழு ஒன்று இந்தியாவுகு இன்று வந்துள்ளது. இன்று மதியம் அந்த குழுவின் 28 உறுப்பினர்கள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரை சந்திக்க உள்ளனர்.
ஏற்கனவே பிரதமர் மோடி மற்றும் அஜித் தோவல் ஆகியோர் காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து குழுவிடம் விவரித்துள்ளனர். நாளை இந்தக் குழுவினர் காஷ்மீர் மாநிலம் சென்று நேரில் பார்வையிட உள்ளனர். முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தனது மகள் இட்லிஜா மூலமாக டிவிட்டரில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், “ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவினருக்கு இங்குள்ள மக்கள், உள்ளூர் ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், மற்றும் சமூக நல ஆர்வலர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். காஷ்மீருக்கும் உலகின் மற்ற பகுதிகளுக்கும் உள்ள இரும்புத் திரை இதன் மூலம் விலகும். காஷ்மீரின் தற்போதைய கொந்தளிப்புக்கு இந்திய அரசு காரணம் என்பதை அனைவரும் அறிந்துக் கொள்வார்கள்.” எனப் பதிந்துள்ளார்.