மும்பை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நேரத்திலும் ராஜஸ்தான் அரசை அமித்ஷா பாடாய்ப்படுத்துவதாக சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னா தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ளார். அவர் விரைவில் குணமடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் வாழ்த்துச் செய்திகள் அனுப்பி வருகின்றனர்.  அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த தலையங்கத்தில்,  “ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்துக் கொண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.  இதைப் போல் அருமையான தருணம் வேறு கிடையாது.    இந்தியாவில் பகவான் ராமர் அருளால் கொரோனாமுற்றிலும் அழிந்து விடும்.  இந்த விழாவில் அத்வானி ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் கொரோனா அச்சுறுத்தலாலும் வயதானதாலும் கலந்து கொள்ள வாய்ப்பில்லை.

அத்துடன் உமாபாரதியும் கலந்துக் கொள்ளப் போவதில்லை.  மோடி மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவர் கல்ந்துக் கொண்டாலும் இந்த விழா அமித்ஷா வராமல் களையாக இருக்காது.   துரதிருஷ்ட வசமாக அமித்ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.  மோடிக்கு நெருக்கமான அமித்ஷாவுக்கு ராமர் புண்ணியத்தில் எதுவும் நடக்காது என நம்புகிறோம்

கொரோனா தொற்று காரணமாக அமித்ஷா தனிமையில் உள்ளார்.  ஆயினும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் இதனால் மகிழ்ச்சியாக இல்லை.  அமித்ஷா எங்கிருந்தாலும் தனது அரசியல் நடவடிக்கைகளை தொடர்வார்.  எனவே அசோக் கெலாத் ஆட்சிக்கு இன்னும் அபாயம் உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் ராஜஸ்தான் அரசை அமித்ஷா படாய் படுத்தி வருகிறார்,  அனேகமாக அசோக் கெலாத் தனது  எம் எல் ஏக்களை உள்துறை அமைச்சரைப் போல் தனிமையில் வைக்க வேண்டும்.  அவர்களுக்கு வேறு விதமான அபாயம் உள்ளது”எனத் தெரிவித்துள்ளது.