சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி,   வாக்காளர்களுக்கு, தினகரன் அணியினர், தினம் தினம், விதவிதமான பரிசுப் பொருட்களும், பணமும் வழங்கி அசத்தி வருகின்றனர்.

ஏப்ரல் 12ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் ஆர்கே.நகர் தொகுதியில் வெற்றிக்கனியை பறித்தே தீர வேண்டும் என்ற வெறியில் டிடிவி தினகரன் அணியினர் புதுபுதுவகையில் வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.

ஓட்டு 4000 ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அடித்தட்டு மக்கள் வாழும் பகுதியான ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் தற்போது பணமழை மட்டுமல்லாது விதவிதமான பரிசு பொருட்களையும் வழங்கி அதகளப்படுத்தி வருகின்றனர்.

பணம் மற்றும் பரிசுபொருட்கள் வழங்குவதை மாற்று கட்சியினர் தடுத்து வந்தாலும், மற்றொரு வழியாக பணம் ஆறாக பெருக்கெடுத்து ஓடிக்கொண்டேயிருக்கிறது.

ஒவ்வொரு பகுதியிலுள்ள கோவில்களில் குத்துவிளக்கு பூஜை என்று அறிவிக்க செய்து, பூஜைக்கு வந்தோருக்கு இரண்டு சேலைகள், வெள்ளி காமாட்சியம்மன் விளக்கு, தீபாராதனை தட்டு, மணி, துாபக்கால் என, பூஜை பொருட்கள், குங்குமம், விபூதி போன்றவற்றை  இலவசமாக வழங்கி வருகிறார்கள்.

சில இடங்களில் பிலிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் ஸ்டோர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுகிறதாம்.

இதுபோன்ற பரிசு பொருட்கள் காரணமாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் எந்தவித பணிகளுக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இன்று என்ன கிடைக்கும் என எதிர்பார்த்து குடும்பத்தோடு காத்திருக்கிறார்களாம்…