தெலுங்கின் முன்னணி நடிகர், அரசியல்வாதி பவன் கல்யாணை சமூகவலைத்தளத்தில் கிண்டல் செய்துள்ளார் ராம் கோபால் வர்மா.

சத்யா, ரங்கீலா, கம்பெனி, சர்க்கார், சர்க்கார் ராஜ் உள்பட ஏராளமான கல்ட் கிளாஸிக்குகளை தந்தவர் ராம் கோபால் வர்மா. பார்ட் டைமாக படம் இயக்கும் வர்மா, முழுநேரமாக பிரபலங்களை வம்புக்கிழுப்பதை ஹாபியாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், கொரோனா பாதித்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக, சிகிச்சை எடுக்கும் புகைப்படம் ஒன்றை சில தினங்கள் முன்பு வெளியிட்டிருந்தார் பவன் கல்யாண். அந்தப் படத்தை பகிர்ந்திருக்கும் வர்மா, “இந்த புகைப்படத்தில் எது போலியாக இருக்கிறது என்று எனக்கு தெரியப்படுத்துங்கள். சரியாக கண்டுபிடித்துத் தருகிறவர்களுக்கு பரிசு தருவேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்த ஆர்ட் டைரக்ஷன் அமைப்பில் ஏதோ தவறாக தெரிகிறது. ராஜமவுலி சார் தயவுசெய்து உங்க ஆர்ட் டைரக்டர் சாபுசிரிலை கேட்டு எனக்கு சொல்லுங்கள்” என்று ராஜமவுலியையும் வம்பிழுத்துள்ளார். வர்மாவின் இந்த ட்வீட்டால் பவன் கல்யாண் ரசிகர்கள் கொதித்துப் போய் உள்ளனர்.