மாட்ரிட் (சி.என்.என்) ஸ்பெயினின் கொரோனா வைரஸைப் பற்றிய பெரிய அளவிலான ஆன்டிபாடி ஆய்வு, அதன் மக்கள் தொகையில் சுமார் 5% பேர் மட்டுமே வைரஸுக்கு எதிரான  ஆன்டிபாடிகளை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறது. கோவிட் -19 க்கு எதிரான கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் முயற்சியைக் கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ள இந்த முடிவுகள், அதை  “அடைய முடியாதது” என்பதற்கான ஆதாரமாகக் கூறப்படுகிறது. ஏனெனில் குறைந்து 60% மக்கள் ஆன்டிபாடிகளை உருவாக்கினால் மட்டுமே கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அடைந்துள்ளதாக கொள்ளப்படும். மேலும் தற்போதைய இந்தக் கண்டுபிடிப்பு ஸ்பெயினில் இன்னும் சுமார் 95% மக்கள் வைரஸால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர் என்பதை உணர்த்துகிறது. மக்கள் போதுமான அளவு வைரஸ் அல்லது பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ள போது – அல்லது அதற்கு எதிராக தடுப்பூசி போடும்போது – அதன் சுழற்சியை நிறுத்த கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி அடையப்படுகிறது.

61,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களின் நாடு தழுவிய பிரதிநிதி மாதிரியில் ஸ்பெயினின் ஆராய்ச்சி ஐரோப்பிய நாடுகளால் இன்றுவரை  மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் குறித்த ஒரு டஜன் ஸீராலஜிக்கல் ஆய்வுகளை விட மிகப்பெரிய ஆய்வாகத் தோன்றுகிறது என்று ஐரோப்பிய நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையம் சி.என்.என்- இடம் கூறியது. இது ஜூன் 11 அன்று லான்செட்டில் வெளியிடப்பட்ட சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 2,766 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட ஆன்டிபாடி ஆய்வின் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிட்டு முன்வைத்தது.
சீனாவிலும் அமெரிக்காவிலும் இதேபோன்ற ஆய்வுகள் நடந்துள்ளன, மேலும் இந்த பிரதிநிதித்துவ ஆய்வாளர்களிடமிருந்து கிடைத்துள்ள முக்கிய தகவல்கள் என்னவெனில்,  “ஓரளவுக்கு பரவலான வைரஸ் தொற்று உள்ள பகுதிகளிலும் கூட பெரும்பான்மையான மக்கள் கோவிட் -19-க்கு பாதிக்கப்படவில்லை என்பது தெரிகிறது,” என லான்செட் இதழின் ஒரு மதிப்பீட்டாளர் கூறினார்.
“இந்த கண்டுபிடிப்புகளில் இருந்து, ஒரு இயற்கை நோய்த்தொற்றின் மூலம் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கான எந்தவொரு  அணுகுமுறையும் நெறிமுறையற்றது மட்டுமின்றி அடையமுடியாததும் கூட” என்று லான்செட்டின் மதிப்பாய்வளர்கள் மற்றும், வளர்ந்து வரும் வைரஸ் நோய்களுக்கான ஜெனீவா மையத்தின் தலைவர் இசபெல்லா எக்கர்லே மற்றும் ஜெனீவா பல்கலைக்கழகத்தில் வைராலஜிஸ்ட் பெஞ்சமின் மேயர் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடி நிச்சயமாக உருவாகியிருந்தாலும் கூட மீண்டும் நோய்த்தொற்று ஏற்பட முடியாது என்பதை மருத்துவர்களால் உறுதியாக கூற முடியவில்லை. ஆன்டிபாடிகள் வைரஸிலிருந்து மக்களை எவ்வளவு காலம் அல்லது எவ்வளவு சிறப்பாக பாதுகாக்கும் என்பதற்கான தெளிவுகளும் இல்லை. ஸ்பெயினின் ஆய்வு கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், இது முன்னணி அரசாங்க ஆராய்ச்சி மற்றும் தொற்றுநோயியல் நிறுவனங்களால் நடத்தப்பட்டது.
“ஸ்பெயினில் காணப்படும் தீவிர நோய்பரவலுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைந்த அளவு மக்களே வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளைப் பெற்றுள்ளனர். இது மற்ற நாடுகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க செய்தியாகச் செயல்படக்கூடும். தற்போது, கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி என்பது குறிப்பிடத்தக்க அளவிலான மக்கள் பாதிப்பு அடையாமல் பெற முடியாது. இது நமது சுகாதார அமைப்புகளுக்கு பெரும் சுமையாக இருக்கக் கூடும் என்பது மட்டுமின்றி, அதிக எண்ணிக்கையிலான இறப்புகளையும் ஏற்படுத்தக் கூடும், ” என ஒரு அறிக்கை கூறுகிறது.

தொற்றுநோய்க்கான தேசிய மையத்தின் இயக்குநரான ஸ்பெயினின் ஆய்வின் முன்னணி ஆய்வாளர் மெரினா பொல்லன் சிஎன்என் பத்திரிகையிடம் கூறும்போது, “சில வல்லுநர்கள் சுமார் 60% ஸீரோபிரிவலன்ஸ் அளவை அடைந்தால் மட்டுமே அது கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியைக் அடைந்ததாக கொள்ள முடியும் என்று கணக்கிட்டுள்ளனர். ஆனால் நாங்கள் அந்த அளவை அடைய இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டும்,” என்றார். கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஸ்பெயினும் ஒன்றாகும். இங்கு 28,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் 250,000 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 27 முதல் மே 11 வரை நடத்தப்பட்ட ஸ்பெயினின் முதல் கட்ட ஆய்வின் முடிவுகளை லான்செட் வெளியிட்டது. ஆனால், இதன்படி, நாடு தழுவிய ஆன்டிபாடி பாதிப்பு வேறும்  5% என்பதைக் காட்டுகிறது. மேலும் நாட்டில் கோவிட் -19 கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாட்ரிட் பெருநகரப் பகுதியில், 10%, அடர்த்தியான நகர்ப்புற பார்சிலோனாவில் 7% என ஆன்டிபாடிகளைப் பெற்றிருந்தனர். மேலும், பல கடலோர மாகாணங்களும் மிகக் குறைந்த விகிதங்களையே கொண்டிருந்தன.

இதேபோல், ஏப்ரல் முதல் மே மாத தொடக்கம் வரை நடத்தப்பட்ட சுவிஸ் ஆய்வில் ஜெனீவாவின் பாதிப்பு 10.8% என்று லான்செட் தெரிவித்துள்ளது. “இந்த முடிவுகளின்படி, மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் தொற்று நோயற்றவர்களாக இருப்பதால், இவர்கள், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன், இரண்டாவது சுற்று  வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது,” என்று லான்செட்டின் மதிப்பாய்வாளர் மற்றும் ஆசிரியர் எக்கெர்லே மற்றும் மேயர் கூறினர். ஸ்பெயினின் இரண்டாவது கட்ட ஆய்வு முடிவுகள் ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டன. இது தேசிய அளவிலான பரவல் 5.2% என்று காட்டியது. இது முதல் கட்டத்தை விட சற்று அதிகமாகும். மூன்றாவது மற்றும் இறுதி கட்டத்தின் முடிவுகள் திங்களன்று வெளியிடப்பட்டன. இதன்படி, பதிப்பு இன்னும் 5.2% ஆகவே இருப்பதாக போலன் கூறினார்.
Thank you: CNN
Author: Al Goodman, CNN