புதுடெல்லி: சமீபத்தில், டெல்லியில் உள்ள காந்தி ஸ்மிருதியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படங்களை அகற்றுவது குறித்து ஒரு விவாதம் கிளம்பியது.

டெல்லியில் உள்ள தீஸ் ஜனவரி மார்க் இல் உள்ள பழைய பிர்லா வபன் காந்தி ஸ்மிருதி என்றழைக்கப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட மகாத்மா காந்தி இந்த வீட்டில் தான் தன் வாழ்வின் கடைசி சில மாதங்களைக் கழித்தார். அவரது வாழ்க்கையின் அந்த இறுதியான 144 நாட்களின் நினைவுகளை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பழைய பிர்லா பவன் 1971 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு தேசத் தந்தையின் நினைவகமாக மாற்றப்பட்டது. இந்திய சுதந்திர நாளான 15 ஆகஸ்ட் 1973 அன்று அது பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. அங்கு காந்தி வாழ்ந்த காலம் மற்றும் அப்போது நடைபெற்ற அவரது படுகொலை உட்பட பல வரலாற்று நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஃப்ரெஞ்சு புகைப்படக் கலைஞர் ஹென்றி கார்டியர்-ப்ரெஸ்ஸனால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு எல்.ஈ.டி திரையில் குறிப்புகள் எதுவுமின்றி காட்டப்படுகின்றன எனவும் அதனால் அந்தப் புகைப்படங்கள் குறித்த சிறப்பு எதையும் அவை தெரிவிக்கத் தவறி விட்டன எனவும் காந்தியின் பேரன் துஷார் காந்தி கடந்த வாரம் கூறியதையடுத்து சர்ச்சை கிளம்பியது.

காந்தியின் வாழ்க்கை குறித்த பெரும்பாலான புகைப்படங்கள் எல்லாம் கண்காட்சியில் இருப்பதைப் போல காட்சிப்படுத்தப் பட்டிருக்கும்போது அவரது படுகொலை சம்பவங்கள் அடங்கிய புகைப்படங்கள் மட்டும் அகற்றப்பட்டிருப்பது அவரது சில வரலாற்று ஆதாரங்களை அழிப்பதற்கு ஒப்பானது என்று துஷார் கூறியுள்ளார்.

துஷாரின் கூற்றுக்கள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக அருங்காட்சியகம் சென்ற போது, அதன் இயக்குநர் மற்றும் ஊழியர்கள் அதைப் பற்றிக் கருத்து எதுவும் கூற மறுத்து விட்டனர்.