சென்னை,

பிரதமருக்கு, முதல்வருக்கும் உள்ள உறவை தம்பிதுரை சீர்குலைக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.

மேலும் தீய சக்தி நடராஜனை உடனே வேளியேற்றுங்கள் எனவும்  சசிகலாவுக்கு  கோரிக்கை வைத்துள்ளார் முனுசாமி.

அதிமுகவை சேர்ந்த  முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று கிருஷ்ணகிரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி

அப்போது அவர், ‘’அதிமுகவுக்கு எதிரான செயல்க ளில் ஈடுபட்டதால் ம.நடராஜனை கட்சியை விட்டு விலக்கி வைத்திருந்தார் ஜெயலலிதா. அப்படி இருக்கும்போது அவர் இறந்த பிறகு கட்சிக்குள் வந்து நான் தான் அதிமுகவை காப்பாற்றினேன் என்று கூறுகிறார்.  அந்த தீய சக்தியை வெளியேற்றுங்கள்.

ஜெயலலிதாவை ஏ.கே.47 ஆயுதம் கொண்டு திவகாரன் தான் காப்பாற்றி வந்தார் என நடராஜன் கூறியுள்ளார். ஆனால் இந்த ஆயுதம் தடை செய்யப் பட்டுள்ளது. அந்த ஆயுதம் சாதாரண மனிதர்களிடம் இருக்காது.  ஏ.கே-47 ஆயுதம் என்பது எஸ்பி ரேங்கில் உள்ளவர்கள் கூட அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்த வேண்டும்.

அப்படி இருக்கும் போது யாரை ஏமாற்ற இப்படி பேசிவருகிறார் நடராஜன்.

என்னை நக்சலைட் என்றும்,  தனது காலில் விழுந்ததால்தான் எம்.ஜி.ஆர். மன்ற பதவி கொடுத்ததாகவும் சொல்லியிருக்கிறார் நடராஜன்.  ஆனால், கல்லூரியில் படிக்கும்போதே நேரடியாக எம்.ஜி.ஆர். மூலம் கட்சிக்கு வந்தேன்.

2011ல் என்னை அமைச்சராக அறிவித்த பின்னர்தான் சசிகலாவை முதன்முதலாக சந்தித்து பேசினேன். நான் எப்போதும் பொதுச்செயலாளர்களிடம்தான் பேசுவேன்.  அதேபோல்தான் தற்போது நான் உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன்.

தீய சக்தி நடராஜனை வேளியேற்றுங்கள்  என்று கூறினார்.

மேலும்,  மத்திய மாநில அரசுகள் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டுவருகிறது. இதனை சீர்குலைக்கும்.முயற்சியில் தம்பிதுரை செயல்பட்டு வருகிறார். எம்ஜிஆர் ஆட்சிகாலத்திலும் சரி ஜெயலலிதா ஆட்சிகாலத்திலும் சரி உறவினர்களுக்கு இடமளிக்கவில்லை. ஆனால் தற்போது குடும்ப அரசியல் நடந்து வருகிறது.

ஒன்றை கோடி தொண்டர்களில் 2500 தொண்டர்கள் மட்டுமே பொதுச்செயலாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். மீதமுள்ள தொண்டர்கள் அமைதியாக பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அன்பை பெறும் வகையில் பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும்.

துணை சபாநாயகர் தம்பித்துரை, அரசாங்க உயர் பதவியில் இருப்பவர். தலைமை பண்பில்லாமல், பொதுச் செயலாளரை முதல்வராக வர வேண்டும் என சொல்கிறார்.  முதல்வர் மீது தம்பிதுரைக்கு ஏன் இந்த காழ்ப்புனர்சி.

பிரமருக்கும் முதல்வருக்கும் உள்ள உறவை தம்பிதுரை  சீர்குலைக்க பார்க்கிறார்.

நடராஜனும், தம்பிதுறரயும் பிரதமரை விமர்சித்து கட்சிக்குள் குழப்பத்தை உண்டு பண்ண முயற்சி செய்கிறார்கள்.  இவர்களை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.