திருநாவுக்கரசர் – இளங்கோவன்

சென்னை:

ன்று சென்னை ராயப்பேட்டை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தன்னைப் பற்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவிக்கும் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

 

செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் தெரிவித்ததாவது:

“தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிப்பது குறித்து முடிவெடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருந்ததாகவும், நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்குபடி கூறியதாகவும், சிலர் தலையிட்டு அதை தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்த அன்று இரவு, 10.30 மணிக்கு எனக்கு டில்லியில் இருந்து தகவல் வந்தது. ‘திமுக எடுக்கும் முடிவுகளை காங்கிரசும் எடுக்க வேண்டும்’ என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதை உடனடியாக அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் தெரிவித்தேன். அப்படி இருக்கும் போது நான் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறேன் என காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்படி சிலர் பேசி வருகிறார்கள். அவர்களுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து வருகிறேன்.

காங்கிரஸ் கட்சியில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. ராகுல்காந்தி, முகுல்வாஸ்னிக் ஆகியோரை கலந்து பேசியே முடிவுகளை அறிவித்து வருகிறேன். அப்படி இருக்கும் போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்றவர்கள் எனக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

அவரது கருத்துக்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது” என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

மேலும் அவர், “சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக  உறுப்பினர்கள்  தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். தாக்கியவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக  தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்க வேண்டும்”  என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.