மும்பை

செல்லாத நோட்டாக அறிவிக்கப்பட்ட ரூ 500 மற்றும் 1000 நோட்டுக்களை மாற்றி புதிய ரூபாய் நோட்டுக்களாக கொடுப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது.

பழைய நோட்டுக்களை மாற்ற காலக்கெடு ஏற்கனவே முடிந்தது தெரிந்ததே.  அனால் இந்த நோட்டுக்களை மாற்றித் தருவதாக ஒரு சிலர் கிளம்பி உள்ளனர். இது ஒரு வியாபரமாகவே நடைபெறுகிறதாம்.  வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஜூன் 30 வரை பழைய நோட்டுக்களை மாற்ற காலக் கெடு உள்ளது.  அவர்களை  பயன்படுத்தி இந்த வியாபாரம் நடக்கிறதாம்.

இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பிரவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இது பற்றிக் கூறுகையில் இதற்கான கமிஷன் தொகை மிகவும் அதிகம் என்றும் ரூ. 100 கொடுத்தால் ரூ. 9 கிடைக்கும் என கூறினார்.  அதாவது ஒரு கோடி ரூபாய் பழைய நோட்டுக்களுக்கு ரூ 9 லட்சம் புதிய நோட்டுக்கள் கிடைக்குமாம்.  இவர்கள் கமிஷன் 1% தானாம்,  பாக்கி 90% வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தரப்படுகிறதாம்.   அதாவது ஒரு கோடி ரூபாய்க்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் 90 லட்சத்தை அவர்கள் வைத்துக் கொண்டு, 10 லட்சம் இவர்களுக்கு தர வேண்டுமாம். இவர்கள் அதிலிருந்து ரூ 1 லட்சம் எடுத்துக் கொண்டு மீதியை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பார்களாம்.

இது சாத்தியமா எனக் கேட்டதற்கு, இப்படி பணம் மாற்றுபவர்களுக்கு கணக்கில் காட்ட முடியாத பணத்தை முழுவதுமாக இழப்பதற்கு பதில் சிறிதாவது கிடைக்கும் எனவும், அப்படி இல்லை எனில் இந்தப் பணத்துக்கு கணக்கு காட்ட முடியாமல் போவதுடன், எதிர்காலத்திலும் பல கேள்விகளை சந்திக்க நேரிடுமாதலால் இப்படி மாற்றி விடுகிறார்கள் என பிரவின் கூறினார்.

வரும் ஜூன் 30ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவதால், ஜுன் 25 வரையே இந்த தொழில் எனவும்,  கடைசி நேர கும்பலை தவிர்க்கவே இப்படி ஒரு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

ஆனால் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இது பற்றிக் கேட்டபோது இது பொய்த்தகவல் என்றும்,  சரியான ஆவணங்கள் இன்றி வெளிநாடு வாழ் இந்தியர்களால் அதிகத் தொகைகளை மாற்றவே முடியாது எனவும் தெரிவிக்கின்றனர்.