வாஷிங்டன்:

மோடி டிரம்ப் சந்திப்புக்கு பிறகு விமானநிலையங்களில் காத்திருக்காமல் அமெரிக்காவுக்குள் விரைந்து நுழையும் வாய்ப்பு இந்தியர்களுக்கு கிடைத்துள்ளது.

 

இந்திய பயணிகள் இனி அமெரிக்காவில் விரைந்து நுழைய அனுமதி வழங்கப்பட்டுளளது. சர்வதேச துரித பயணிகள் முனைப்பு (உலகளாவிய நுழைவு திட்டம்) திட்டத்தில் இந்தியா நுழைந்துள்ளது.

இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் தொழில், கல்வி போன்றவற்றில் இந்தியா மற்றும் அமெரிக்க குடிமக்கள் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்படும்.

டிரம்ப் மற்றும் மோடி இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில்,‘‘ இந்திய தொழில்முனைவோர் மற்றும் இந்தியர்களின் கண்டுபிடிப்புகளை டிரம்ப் பாராட்டினார். இரு நாட்டு குடிமகன்களின் செயல்பாட்டால் இரு தேசங்களும் பயன்பெறும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து, ஐக்கிய பேரரசு ஆகிய நாடுகளின் குடிமக்களும் இந்த உலகளாவிய நுழைவு திட்டத்தில் ஒரு அங்கமாக உள்ளனர். தற்போது இதில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்த திட்டம் அமெரிக்காவில் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு திட்டமாகும்.

இதன் மூலம் அமெரிக்காவில் இறங்கியவுடன் குறைந்த அபாயம் உள்ள பயணிகள் என்ற அடிப்படையில் விரைந்து நுழைய இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படும். குறிப்பிட்ட விமான நிலையங்களில் இந்த திட்ட உறுப்பினர்கள் இமிகிரேஷன் அதிகாரிகள் அனுமதி பெற வரிசையில் காத்திருக்காமல் தானியங்கி எ ந்திரத்தில் விரைந்து அனுமதி பெற்று அமெரிக்காவிற்குள் நுழையலாம்.