கொல்கத்தா: நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, ஒரு காலாவதியான பிரதமர் என விமர்சித்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மேற்குவங்க மாநிலத்தின் வளர்ச்சிப் பாதையில், மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ‘வேகத் தடையாக’ இருக்கிறார் என தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது விமர்சித்திருந்தார் மோடி.

அதற்கு பதிலடி கொடுத்துள்ள மம்தா பானர்ஜி, “மோடி ஒரு காலாவதியான பிரதமர். நான் ஒன்றும் மோடியல்ல; பொய் சொல்வதற்கு. என்னுடைய ஆட்சியில் மேற்குவங்க மாநிலம் பெரிய வளர்ச்சி கண்டுள்ளது.

மோடி தன்னுடைய ஆட்சி காலத்தில், நாட்டினுடைய வளர்ச்சிக்காக என்ன செய்துள்ளார்? இதுகுறித்து அவர் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?” என சவால் விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி.

மேற்குவங்க மாநிலத்தில் கூடுதல் இடங்களைப் பிடித்துவிட, பல்வேறான மதவாத மற்றும் சாதியரீதியான ஒன்றுதிரட்டல் முயற்சிகளில் பாரதீய ஜனதா ஈடுபட்டுவரும் நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியோ, அதை முறியடிக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

– மதுரை மாயாண்டி