வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு ஆதரவான கருத்துகளை பதிவிட்டு, செயல்பட்டு வந்த போலியான முகநூல், டுவிட்டர் கணக்குகள் மூடப்பட்டுள்ளன.

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் ஊடக நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறது. அதாவது ஆகஸ்ட் மாதம், இபோச் ஊடக குழுமமானது, இதுபோன்று டிரம்புக்கு ஆதரவான கருத்துகளை பரப்பி வருவதாக கண்டறிந்தது.

இந்த கருத்துகள் அனைத்தும் முகநூல், டுவிட்டர் வழியே பரப்பப்பட்டன. இபோச் நிறுவனமானது, சீனாவில் பாலின் காங் என்ற பாரம்பரிய அமைப்புடன் தொடர்பில் இருக்கிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இபோச் நிறுவனம் முற்றிலுமாக நிராகரித்து இருக்கிறது. முகநூல் நிறுவனமானது, போலியான கணக்குகள் மூலம் டிரம்புக்கு ஆதரவாக கருத்துகளையும், செய்திகளையும் பகிர்ந்திருக்கிறது.

மொத்தம் 610 கணக்குகள், 89 பேஸ்புக் பக்கங்கள், 156 குழுக்கள், 72 இன்ஸ்டாகிராம் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. 55 மில்லியன் கணக்குகள், இந்த பேஸ்புக் பக்கங்களை பின் தொடர்ந்திருக்கின்றன. 92,000 பேர் குறைந்த பட்சம் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தையாவது பின் தொடர்ந்திருக்கின்றன.

தற்போது அந்த நிறுவனத்தின் தரவுகள், பேஸ்புக் பக்கத்தால் முடக்கப்பட்டு இருக்கிறது என்று அதன் தலைமை பாதுகாப்பு அதிகாரி கிளேசியர் அறிவித்து உள்ளார். இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.