அங்காரா: துருக்கியில் கடந்த 2016ம் ஆண்டு தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடைய நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் 249 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இந்த முயற்சிக்கு மூளையாக செயல்பட்டவரும், துருக்கி நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து வாழ்பவருமான ஃபெதுல்லா குலெனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், தோல்வியடைந்த புரட்சியை பின்னின்று நடத்தியவர் என்ற குற்றச்சாட்டை மறுத்தார் குலென்.

தற்போது கைது செய்யப்பட்ட 249 பணியாளர்களும், அமைச்சகத்தின் கடந்தகால நுழைவுத் தேர்வுகளில் மோசடி செய்த குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் என்று அங்காராவின் முதன்மை நீதி விசாரணை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள் என்ற அடிப்படையில், 77,000 பேர் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், 1,50,000 உள்நாட்டுப் பணியாளர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் இதர நபர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் அல்லது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.