டில்லி,

ரட்டை இலையை மீண்டும் பெற தேர்தல் கமிஷனிடம் போலி பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக சசிகலா அணி மீது ஓபிஎஸ் அணி புகார் கூறி உள்ளது.

முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்க கோரி அதிமுக அம்மா அணி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் போலியானவை என்று ஓபிஎஸ் அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறப்பட்டுள்ளது.

ஜெ மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டு அணிகளாக உடைந்தது. அதையடுத்து அதிமுகவின் இரட்டையை இலையை முடக்கியது தேர்தல் கமிஷன்.

இதைத்தொடர்ந்து எது உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்க பிரம்மான பத்திரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து இரு அணியினிரும்  மாறி மாறி லட்சக்கணக்கில் லாரி லாரியாக பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.

இந்த பிரமாணப் பத்திரங்களை படித்து, பரிசீலனை செய்யவே பல ஆண்டுகள் ஆகும் என்றும், இதை பரிசீலனை செய்ய போதுமான அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தில் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் சசிகலா அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்டவை அனைத்தும் போலி ஆவணங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் மைத்ரேயன் மற்றும் மனோஜ்பாண்டியன் தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன் எம்.பி, சசிகலா அணி லட்சக்கணக்கில் தாக்கல் செய்துள்ளவற்றில் பல போலியான ஆவணங்கள். இதை தேர்தல் கமிஷன் ஏற்கக்கூடாது என்று கூறினார்.

அதையடுத்து  பேசிய மனோஜ்பாண்டியன் சசிகலா அணி அளித்துள்ள பத்திரங்கள் மற்றும் அதில் போடப்பட்டுள்ள  கையெழுத்துக்கள்  போலியானவை என்று ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திடம் ஆதாரம் அளித்துள்ளோம் என்றார்.

மேலும், போலி ஆவணங்களை தயாரித்தவர்கள் அவர்களுக்கு துணை நின்றவர்கள் மீது கிரிமினல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் கமிஷனிடம்  வலியுறுத்தியுள்ளோம் என்றும் கூறினார்.