ஆன்லைனில் பொருட்கள் வாங்குகிறீர்களா?: ஏமாறாமல் இருக்க இதைப் படிங்க..
டில்லி
ஆன்லைன் மூலம் பல போலியான பொருட்கள் விற்கப்படுவதாக நியூஸ் 18 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தீபாவளியின் போது அதாவது செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 19 வரையிலான காலகட்டத்தில் ரூ. 19000 கோடி ரூபாய்க்கு ஆன்லைன் வர்த்தகம் நடந்துள்ளது. கடந்த வருடத்தை விட 45% அதிகமாகி உள்ளது. அதே நேரத்தில் இந்தப் பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுவதால் உண்மையானவை தானா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து செய்தித் தொலைக்காட்சி நிறுவனமான நியூஸ் 18 ஒரு கண்டுப்பிடிப்பை நிகழ்த்தி உள்ளது. அதன்படி ஆன்லைன் வர்த்தகர்கள் செய்தி தொழில்நுட்ப விதிகளில் உள்ள ஓட்டை வழியாக போலிப் பொருட்களை விற்று தாங்கள் அதற்கு பொறுப்பேற்க முடியாது என கூறி விடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விளையாட்டுப் பொருட்களில் 60% மற்றும் ஆடைகளில் 40% போலியானவை எனவும் தெரிவித்துள்ளது
இது குறித்து அந்த தொலைக்காட்சி, “எங்களுக்கு பலர் இந்த ஆன்லைன் வர்த்தகம் மூலம் போலிப் பொருட்கள் விற்கப்படுவதாக தகவல்கள் அளித்ததை ஒட்டி நாங்கள் ஒரு குழு அமைத்து இது குறித்து ரகசிய சோதனைகள் நடத்தினோம். இந்த சோதனையின் போது மீரட் பகுதியில் நிறைய போலிப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலானவை விளையாட்டுப் பொருட்கள். பிரபலமான தயாரிப்பாளர்களின் பெயர்களை தாங்கி நிற்கும் இவை ஃப்ளிப்கார்ட், ஷாப்க்ளூஸ் மற்றும் ஸ்னாப்டீல் போன்ற புகழ் பெற்ற ஆன்லைன் தளங்கள் மூலம் விற்கப்படுகின்றன. அத்துடன் விளையாட்டுப் பொருட்களில் 60% மற்றும் ஆடைகளில் 40% போலியானவைகளே விற்கப்படுகின்றன.
இங்குள்ள விற்பனையாளர்களில் ஒருவரான மோகித் பந்து, தம்மிடம் உள்ள காஸ்கோ, நிவியா என்னும் பெயர் பொறிக்கப்பட்ட பந்துகளை நல்ல கழிவு விலையில் விற்பதாகவும் அவைகள் போலிகள் என்பதாலே அந்த விலைக்கு விற்க முடிவதாகவும் கூறி உள்ளார். அந்த பந்துகள் அதே பகுதியில் ரூ.170 – ரூ. 200 க்கு வாங்கப் படுவதாகவும், அவற்றை ரூ. 450 – ரூ, 500 என விற்பதாகவும் கூறி உள்ளார். அத்துடன் அதன் அதிகபட்ச வில்லை ரூ. 1000 என கூறப்பட்டு 50% க்கு மேல் குறைந்த விலையில் விற்பதாக விளம்பரம் செய்யப்படுவதாகவும் கூறி உள்ளார். தற்போது இங்குள்ள வர்த்தகர்கள் பற்றி காவல்துறைக்கு புகார் அளிக்கப்படுள்ளது.” என தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆன்லைன் வர்த்தகர்களில் ஒருவர், “நாங்கள் போலிப் பொருட்களை கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து அவைகளை விற்பதில்லை. ஆனால் சில சமயங்களில் எங்களையும் மீறி ஒரு சில பொருட்கள் போலியானவைகளாக உள்ளன. அத்துடன் நாங்கள் நேரடியாக உற்பத்தி செய்வதோ விற்பனை செய்வதோ கிடையாது. நாங்கள் இடையில் உள்ளவர்கள் மட்டுமே. அதனால் எங்களால் போலிப் பொருட்கள் குறித்து எந்த உத்திரவாதமும் அளிக்க முடிவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.