மதுவை ஊற்றி பலாத்காரம்… சிறுவர்களைச் சீரழித்த கொடூர சாமியார்..

உத்திரபிரதேச மாநிலம், முசாபர் நகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சுக்ரட்டல் ஆசிரமம்.  இந்த ஆசிரமத்தை  சுவாமி பக்தி பூஷண் கோவிந்த், மோகன் தாஸ் என்பவருடன் சேர்ந்து நடத்தி வந்தார். அவருடைய ஆசிரமத்தில் கல்வி பயில வந்த சிறுவர்கள், பல கொடுமைகளை அனுபவிப்பதாக அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் போனில் குழந்தைகள் நல வாரியத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரைத் தொடர்ந்து இந்த ஆசிரமத்திற்குச் சென்ற போலீசார் பாதிக்கப்பட்ட 10 சிறுவர்களை ஆசிரமத்திலிருந்து மீட்டனர். இவர்கள் திரிபுரா, மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.  மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த போது, அவர்களில் நான்கு பேர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது அம்பலமானது.  அதைத் தொடர்ந்து போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட சாமியார் இந்த சிறுவர்களுக்கு கொரோனா மருந்து என்ற பெயரில் வலுக்கட்டாயமாக மதுபானத்தை ஊற்றிக் குடிக்கக் கொடுத்துள்ளார்.  அதன் பிறகு அவர்கள் போதையில் இருக்கும் போது ஆபாசப் படங்களை வற்புறுத்திப்  பார்க்க வைத்துள்ளார். பின்னர் அவர்களைக் கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கூறுகையில், அவர் பேச்சைக் கேட்க மறுத்தால் கண்மூடித்தனமாகத் தாக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

“தற்போது போக்சோ வழக்கின் கீழ் சுவாமி பக்தி பூஷண் கோவிந்த், மோகன் தாஸ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த சாமியார்  மீசாட்டில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ள சிசாலி கிராமத்தில் வசிப்பவர்.  அவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இந்த ஆசிரமத்தை அமைத்தார்” என்று முசாபர்நகர் எஸ்.எஸ்.பி அபிஷேக் யாதவ் தெரிவித்துள்ளார்.

– லெட்சுமி பிரியா