சென்னை:
நடிகர் சங்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி, கொலை மிரட்டல் விடுத்த வாராகி, சங்கையா மீது நடிகர் நாசர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் சங்கத்தில் ரூ.3 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக நடிகர் வாராகி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்திருந்தார். இது ஆதாரமற்ற புகார் என்று நடிகர் சங்க செயலாளர் விஷால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நிர்வாகிகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
nasar
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
27.08.2016 காலை 11.30 மணியளவில் சங்க உறுப்பினர் வாராகி சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ள நடிகர் சங்க அலுவலகத்திற்கு வந்திருந்தார். சங்க செயற்குழு உறுப்பினரும், டிரஸ்டியுமான பூச்சி முருகன், செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், ஸ்ரீமன், உதயா மற்றும் சங்க சட்ட ஆலோசகர் கிருஷ்ணா ரவீந்திரன் ஆகியோர் வாராகியின் சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ள காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், வாராகி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் யாரும் இல்லாதபட்சத்தில் நான் பேச விரும்பவில்லை என்று கூறி சென்றுவிட்டார். ஆனால், சங்கத்தின் நுழை வாயில் எதிரே அனைத்து முன்னேற்பாட்டோடு ஊடகங்களை வரவழைத்து பேட்டி கொடுத்தார். இது அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த வேண்டாமென்றும், நுழைவாயில் எதிரே கூட்டம் கூட வேண்டாம் என்றும் அலுவலக ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.
அதற்கு வாராகி மறுத்துவிட்டு, அவருடன் அலுவலகத்திற்கு வெளியே ரவுடிகளை வரவழைத்து கூட்டம் சேர்த்து கொண்டு நிர்வாகத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கோஷம் போட்டு கொண்டு அலுவலக ஊழியர்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசினார். அலுவலக ஊழியர்கள் சத்தம் போட வேண்டாம் என்று கூறியதற்கு, என்னைப்பற்றி உங்களுக்கு தெரியாதென்றும், தான் மிகவும் மோசமானவன் என்றும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.
மேலும், சங்கத்திற்கு என்று சட்டவிதிகள் உள்ளது. சங்கத்தினுடைய மரபு பாரம்பரியத்திற்கு குந்தகம் ஏற்படுத்தி சுயவிளம்பரத்திற்காக சங்கத்தின் கொள்கைகளை கேவலமாக்கிவிட்டார். எனவே, அவரை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறும், இச்சம்பவத்தால் பயந்து மன உளைச்சலுக்குள்ளாகியிருக்கும் இரு பெண் ஊழியர்கள் உட்பட மற்ற ஊழியர்களுக்கும், சங்க அலுவலகத்திற்கும் பாதுகாப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.