குலதெய்வ சாபத்திற்கான பரிகாரம்

சனாதன தர்மத்தின்படி உள்ள 13 வகை சாபங்களை முன்னமே பதிந்திருந்தோம். அதிலே முக்கியமான குலதெய்வ சாபத்தைக் கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன என்று பார்ப்போம் :-
சாபங்களில் மொத்தம் 13 வகை உண்டு. அதில் மிகவும் கொடுமையான சாபம் என்றால் அது குலதெய்வ சாபம் என்றே கூற வேண்டும்.
இந்த குலதெய்வ சாபம் எதனால் ஏற்படுகிறது ? நமது ஜாதகத்தில் குலதெய்வத்தின் சாபம் இருக்கிறதா என்பதைக் கண்டறிவது எப்படி ?

நமது முன்னோர்கள் வழிவழியாக வணங்கும் ஒரு தெய்வமே குலதெய்வமாகும்.
மற்ற அனைத்து தெய்வங்களைக் காட்டிலும் குலதெய்வத்திற்குச் சக்தி அதிகம். எமன் கூட ஒருவரின் உயிரைப் பறிக்க வேண்டுமானால் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே பறிப்பார்.
இப்படிப் பல அபூர்வ சக்திகளைக் கொண்ட குலதெய்வத்தின் சாபம் எதனால் ஏற்படுகிறது ?
ஒருவரது வம்சாவளியில் வரும் தாத்தா பாட்டி, தாய் தந்தையர் போன்றோர்கள் குலதெய்வத்திற்குச் செய்யவேண்டிய வருடாந்திர பூஜையை முறையாகச் செய்யத் தவறினாலோ, குலதெய்வத்தை அடியோடு மறந்து வேறு இஷ்டதெய்வங்களை மட்டுமே வணங்கத் தொடங்கி குலதெய்வ கோயிலிற்குச் செல்வதை முற்றிலும் தவிர்த்துவிட்டாலோ குலதெய்வத்தின் சாபம் நிச்சயம் ஏற்படும்.
குலதெய்வ சாபம் இருக்கிறதா என்பதை ஜாதகத்தை வைத்து எப்படி அறிவது ?
ஒருவருடைய ஜாதகத்தில் குலதெய்வத்தைக் குறிக்கக்கூடிய க்ரஹமாக விளங்குகிறார் சனி பகவான்.
அதன் அடிப்படையில் ஒருவருடைய ஜாதகத்தில் சனி பகவான் இருக்கின்ற வீட்டில் இருந்து 6ம் வீட்டில் புதன், சந்திரன், சூரியன் ஆகிய க்ரஹங்கள் இருந்தால் அந்த ஜாதகருக்கு குலதெய்வ சாபம் இருக்கிறது என்பதை எளிதாக அறியலாம் என்கிறார்கள் ஜோசியர்கள்.
குலதெய்வ சாபத்தால் ஏற்படும் விளைவுகள் :-
குலதெய்வ சாபம் உள்ள ஒருவருக்குத் திருமணத்தில் தடை இருக்கும். சிலருக்குக் குழந்தைப் பேறு இருக்காது. எதைத் தொட்டாலும் அதில் ஒரு இழுபறி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்காது. இப்படி குலதெய்வ சாபத்தால் பல துன்பங்கள் வரும்.
இந்த துன்பமானது நமக்கு மட்டும் இல்லாமல் நமது சந்ததியினருக்கும் தொடரும்.
நம்மோடு இந்த சாபம் முடிந்து நமது சந்ததியினருக்கு இது தொடராமல் இருக்கச் சாப நிவர்த்தி செய்வது அவசியம்.
குலதெய்வ சாபத்திற்கான பரிகாரம் :-
நம்முடைய குலதெய்வம் யார் என்பதை அறிந்திருந்தால் குலதெய்வ சாப பரிகாரம் என்பது மிக எளிதாக இருக்கும்.
குலதெய்வம் பற்றி அறியாதவர்கள் முதலில் குலதெய்வத்தை அறிவது அவசியம். பின் நம் முன்னோர்கள் எப்படி குலதெய்வத்தை வழிபட்டார்களோ அதே போல நாமும் குலதெய்வத்தை வழிபட வேண்டும். பொங்கல் வைத்து குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்வர்.
இப்படி நம் முன்னோர்கள் எந்த முறையில் குலதெய்வத்தை வணங்கினார்களோ அதே முறைப்படி நாம் வணங்கவேண்டும்.
நாம் இத்தனை நாள் செய்த தவற்றுக்காகக் குலதெய்வத்திடம் மன்றாடி வேண்டி நாம் கொடுக்கும் பூஜையை ஏற்கும்படி கேட்கவேண்டும்.