சென்னை: நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் குடுமிபிடி சண்டை நடந்து வருகிறது.  இதையடுத்து,  விஜய்,  விஷ வளையத்தில் சிக்கியுள்ளார் என்று கூறிய அவரது தந்தை எஸ்ஏசி, “விஜய் என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும்” என  ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல டைரக்டருமான  எஸ்.ஏ.சந்திரசேகர் அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியின் பெயரை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து உள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே தனது படங்களிலும், சினிமா நிகழ்வுகளிலும் ரஜினி  போல அரசியல் பஞ்ச் டயலாக் பேசி தனது ரசிகர்களை உசுப்பேததி வரும் விஜய், அரசியல் கட்சியை தொடங்கிவிட்டார் என அனைவரும் நினைத்திருந்தனர்.

இதையடுத்து, தான் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றும், கூறிய விஜய், தனதுக்கும், இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ;ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் என விஜய் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார்.  ஆனால்,  அவரது  தந்தை  எஸ்ஏசியோ, தான்தான் கட்சியின் பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்து உள்ளதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக, தந்தை மகன் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு வெளிச்சத்துக்கு வந்தது.  அதை உறுதிப்படுத்தும் வகையில், விஜயின் தாயும், எஸ்ஏசியின் மனைவியும், விஜய் மக்கள் இயக்கத்தின் பொருளாளராக அறிவிக்கப்பட்ட ஷோபா,  எஸ்ஏசி தொடங்கியுள்ள கட்சியில் நான் இல்லை என்றும்,  அவர் என்னிடம் எதையும் சொல்லாமல் என்னிடம் கையெழுத்து வாங்கி என்னை பொருளாளராக நியமித்துள்ளார். அதனால் கட்சியில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறியதுடன், நடிகர் விஜய்யும் அவரது தந்தையும் சரியாக பேசிக் கொள்வதில்லை என்று கூறினார்.

இது தமிழக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  விஜயின் தந்தை டைரக்டர் சந்திரசேகர்,  இணையதள ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,  “நான் என் மகனுக்கு எது நல்லதோ அதைத்தான் செய்வேன். அவன் நன்றாக இருக்க வேண்டுமென்று 1993ல் அவருக்கான ரசிகர் மன்றத்தை உருவாக்கினேன். தற்போது அவர் உச்ச நட்சத்திரமாகி விட்டார் . அதனால் அவர் எனக்கு பிள்ளை என்று ஆகிவிடாது. அவரை நான் இன்னமும் குழந்தையாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

நான் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் விஜய்க்கு உடன்பாடு இல்லை. ஆனால்,  அதை நான் அவரது நலனுக்காகவே  செய்துள்ளேன்.   அப்பா அவரது நல்லதுக்குதான் செய்தார் என்பதை அவர் புரிந்து கொள்வார்.  விரைவில் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன். தனது ரசிகர்களை நான் தொடங்கியுள்ள கட்சியில் சேர வேண்டாம் என்று அவர் சொல்லியிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம். நான் பொதுவாகவே விஜயிடம் ஆறு மாதத்திற்கு , மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் பேசுவேன். தற்போது அவரிடம் பேசுவது சரியாக இருக்காது.

எனது புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார். அதுபோல் அவர் என் மீது நடவடிக்கை எடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும். அப்பா மீது பிள்ளை நடவடிக்கை எடுத்தார் என்பதே வரலாறு தானே.

மேலும், விஜய் ரசிகர் மன்றம் என்னுடைய அமைப்பு. அதை இயக்கமாக மாற்றிய போது அதன் நிறுவனராக நான்தான் இருந்தேன். அதை தற்போது நான் கட்சியை அரசியல் கட்சியாக மாற்றி உள்ளேன். எனது மனைவி சோபாவுக்கு அரசியல் கட்சியில் சேர விருப்பம் இல்லை என்றால் அவர் விலகிக் கொள்ளட்டும். அவருக்கு பதிலாக நான் வேறு ஒருவரை பொறுப்பாளராக போடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. எல்லா அப்பா மகனைப் போல எனக்கும் விஜய்க்கும் அவ்வப்போது சண்டை வரும் பேசாமல் இருப்பது சாதாரணமானதுதான்.

விஜய் தான் என் கடவுள். அதை அவர் விரைவில் புரிந்து கொள்வார். விஜய் என்னை விட புத்திசாலி. அவருக்கு தெரியாத ரகசியம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அது விரைவில் உடையும். விஜய் ஒரு சிறிய விஷ வளையத்தில் சிக்கியுள்ளார். அதிலிருந்து வெளியே வர வேண்டும். என் பிள்ளையை காப்பாற்ற வேண்டும். அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.