முன்னணி நடிகரின் மனைவி இன்ஸ்டாகிராமில் உருக்கம்..

’ஆடு ஜீவிதம்’ என்ற மலையாள திரைப்படத்தின் வெளிப்புற படப்பிடிப்புக்காக ஹீரோ பிரித்விராஜ் ,இயக்குநர் பெளெஸ்ஸி உள்ளிட்ட 58 பேர் கடந்த பிப்ரவரியில் ஜோர்டான் சென்றனர்.

படப்பிடிப்பை முடித்து விட்டுப் படக்குழு கடந்த மாதமே கேரளா திரும்பி இருக்க வேண்டும்.

ஆனால் உலகளாவிய ஊரடங்கு காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், அந்த நாட்டின் பாலைவன பகுதியில் பிரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர், சிக்கிக்கொண்டனர்.

ஜோர்டான் நாட்டை சேர்ந்த 30 பேரும் அந்த படத்தில் நடித்து வந்தனர். அவர்களும், இந்த குழுவுடன் மாட்டிக்கொண்டனர்.

கணவனைப் பிரிந்து மாதங்கள் பல கடந்த நிலையில் பிரித்விராஜ் மனைவி சுப்ரியா, தனது கவலையை இன்ஸ்டாம்கிராம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

‘எப்போது ஊரடங்கு முடியும் என்று என் மகள் கேட்கிறாள். இன்றாவது அப்பா வருவாரா? என்றும் கேட்கிறாள். நானும், அவளும் ( மகள் அலங்கரிதா) காத்துக்கொண்டிருக்கிறோம்’’ என்று பிரித்விராஜ் மனைவி இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஊரடங்கு காரணமாக சில நாட்கள் நிறுத்தப்பட்டிருந்த ’ஆடுஜீவிதம்’’ படப்பிடிப்பு தற்போது ஜோர்டானில் மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்