மதுரை: புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தமிழக அரசின் விரிவான கொரோனா தடுப்பு வழிகாட்டுதலுடனும், பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் தொடங்கியது. போட்டியைக் காண பார்வையாளர்கள் உடல் வெப்ப பரிசோதனைச் செய்யப்பட்டு தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.

சீறிபாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் துணிச்சலுடன் அடக்கினர். காளைகளை அடக்கியவர்களுக்கு கட்டில், பீரோ, அண்டா, தங்க நாணயம், பைக் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.

இன்று மாலை 5 மணியளவில் ஜல்லிக்கட்டு நிறைவுபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை பிடித்து வீரர் கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் பிடித்துள்ளார். 17 காளைகளை பிடித்து மாடுபிடி வீரர் பிரபாகரன் 2வது இடம் பிடித்துள்ளார். இன்றைய ஜல்லிக்கட்டில் மொத்தம் 674 காளைகள் களமாடின.