திருவண்ணாமலை:

கார் விபத்தில் பலியான தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் உடலை பார்த்து நடிகர் கார்த்தி கதறி அழுத சம்பவம் காண்போரை உருக்கியது.

கார்த்தி ரசிகர் மன்றத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்தவர், ஜீவன் குமார் வயது 27. ஜீவனுக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. திருமண விழாவில் கார்த்தி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இந்த நிலையில் ஜீவன், கார்த்தி ரசிகர் மன்றத்தை சேர்ந்த மூன்று நண்பர்களுடன் காரில் சென்னைக்கு வந்தார். திரும்ப திருவண்ணாமலைக்கு பயணம் செய்த போது கார் விபத்துக்குள்ளானது. இதில் ஜீவன் குமார் பலியானார். அவருடன் பயணம் செய்த மூவரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் ஜீவன் குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் கார்த்தி நேற்று திருவண்ணாமலை வந்தார். ஜீவன் குமாரின் உடலை பார்த்த அவர், வேதனை தாங்காமல் கதறி அழுதார். இது காண்போரை உருக்கியது.