சென்னை:

ங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வருகிறது. இதற்கு ‘ஃபனி’ என்று பெயரிடப்பபட்டுள்ளது. இந்த புயலில் தமிழகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நாட்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஃபனி புயல் காரணமாக  அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  மிதமான மழை முதல் மிக கனமழை பெய்யும் என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நாட்களான  ஏப்.30, மே 1ல் கனமழை முதல் மிக கனமழை பெய்ய  வாய்ப்பு இருப்பதால், அன்றைய தினம் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை  ஆய்வு மையம்  அறிவித்து உள்ளது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்,

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றுழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெறக்கூடும் மேலும், இது 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெற்று, தற்போதைய நிலவரப்படி வடதமிழக கடற்கரை பகுதியையொட்டி நகரக்கூடும்.

இதனால் மீனவர்கள் இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், 27, 28 ஆகிய தேதிகளில் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.

மேலும், வங்கக் கடலில் 29ஆம் தேதி உருவாகவுள்ள அந்தப் புயலுக்கு ஃபனி  எனப் பெயரிடப்பட்டுள்ளது என்பதாகவும் கூறினார்.