தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் ‘சரிலேரு நீக்கெவரு’ என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.

அடுத்த மாதம் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்தைப் பிரபலப்படுத்த மகேஷ் பாபு ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியை ஹைதராபாத்தின் சந்தன் நகரில் இருக்கும் அலுமினியம் தொழிற்சாலையில் தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்தது.

1000 பேருக்கான நுழைவுக்கு மட்டுமே பாஸ் அளித்துள்ளனர். ஆனால், கிட்டதட்ட 2000 ரசிகர்கள் கூடிவிட்டனர்.

ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிலருக்கு சின்ன காயங்களும், இரண்டு ரசிகர்களுக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கான போதிய அனுமதியைக் காவல் துறையிடமிருந்து தயாரிப்புத் தரப்பு பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ஏகே என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.