லக்னோ : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்கள் அகற்றப்படும் என்று கிசான் பஞ்சாயத்து  கூட்டத்தில் பிரியங்கா காந்தி ஆவேசமாக பேசினார்.

மோடி அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு  எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாய சட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என டெல்லி எல்லையில், வடமாநில விவசாயிகள் 2 மாதங்களை கடந்தும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்தியஅரசு ஆர்வம் காட்ட நிலை தொடர்கிறது.

இந்த நிலையில், உ.பி. மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக  ‘கிசான் பஞ்சாயத்து’ என்ற பெயரில், விவசாயிகள் கூட்டங்களை  காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக நடத்த திட்டமிட்டுள்ளது.  அதன்படி,  முதல்கூட்டம்,  மேற்கு உத்தரபிரதேசத்தில் சஹாரன்பூரில் ‘கிசான் பஞ்சாயத்து’ என்ற பெயரில்நடைபெற்றது. இதில், உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது,  , வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை பின்வாங்க வேண்டாம் என்றும், காங்கிரஸ்  கட்சி ஆட்சிக்கு வரும்போது இந்த சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்றார்.  புதிய பண்ணை சட்டங்கள் கோடீஸ்வரர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று குற்ம் சாட்டியதுடன், ‘கிசான் பஞ்சாயத்து’  இயக்கம், “இது உங்கள் இருப்பின் இயக்கம். அதிலிருந்து பின்வாங்க வேண்டாம்.  இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் என்று உறுதி அளித்துடன்,  காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது, ​​இந்த சட்டங்கள் அனைத்தும் அகற்றப்படும், மேலும் ஆதரவு விலையின் முழு மதிப்பையும் நீங்கள் பெறுவீர்கள், ”என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  “1955 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர், ஜவஹர்லால் நேரு பதுக்கலுக்கு எதிராக சட்டங்களை உருவாக்கினார். ஆனால் அந்த சட்டங்களை பாஜக அரசு ரத்து செய்துள்ளது.  ஆனால், இந்த புதிய சட்டம் ‘அரபதி’களுக்கு (கோடீஸ்வரர்கள்) உதவும் வகையிலும், விவசாயிகளின் விளைபொருட்களின் விலையை அவர்கள் (கோடீஸ்வரர்களே)  தீர்மானிப்பார்கள் ” என்று தெரிவித்துள்ளது என்றவர்,  “பிரதமரின் இதயம் முதலாளிகளுக்கு மட்டுமே துடிக்கிறது, ஏழைக்களுக்கா துடிக்க மறுக்கிறது,  விவசாயிகளை  பயங்கரவாதிகள் என்று அழைக்கிறார்கள் என்றவர், மோடிஜி சீனா மற்றும் பாகிஸ்தானுக்குச் சென்றார், ஆனால் டெல்லி எல்லைகளுக்கு ஏன் செல்லவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

பிரியங்காவின் ஆவேச பேச்சு விவசாயிகள், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.