டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  வேளாண் சட்டங்கள் தொடர்பாக, விவசாயிகள், அதிகாரிகள் குழு அமைத்து தீர்வுகாண உச்சநீதிமன்றம் மத்தியஅரசுக்கு அறிவுரை கூறி உள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  தலைநகர் டெல்லியிலும்,  மாநில எல்லைகளிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று போராட்டம் 21வது நாளை எட்டியுள்ளது.

இநத நிலையில்,  டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை நடத்த அனுமதிக்கக்கூடாது சட்டக்கல்லூரி மாணவர் ரிஷாப் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுமீதான விசாரணை  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அமர்வில்  இன்று விசாரிக்கப்பட்டது.

அப்போது  விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுத்தது யார்? சாலைகளை மூடியது யார்? என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி  கேள்வியை எழுப்பியது.  கடுமையான குளிரிலும் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை கேட்க வேண்டும் என  மத்தியஅரசையும் கடுமையாக சாடினர்.
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள் எடுபடாது என்றும்  மீண்டும் தோல்வியடையும்  என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், விவசாயிகள் எதிர் கொண்டு வரும் பிரச்சனைகளை தீர்க்க தேசிய அளவில் குழு அமைத்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர். மேலும்,   அந்த குழுவில், பாரதிய கிஷான் யூனியன் உள்பட இந்தியா முழுவதிலும் உள்ள விவசாயிகள் அமைப்புகள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இடம்பெற வேண்டும் என்றும், இந்த குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திய, தீர்வு காண வேண்டும் என்றும் மத்தியஅரசுக்கு  அறிவுறுத்தி உள்ளது.

மேலும் வழக்கு தொடர்பாக  நாளைக்குள் பதிலளிக்க டெல்லி, அரியானா அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.