டெல்லி: டெல்லியில் 10 மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் திறக்கப்பட்டுள்ளன.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், நாடு முழுவதும் விவசாய சங்கத்தினர் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லி மாண்டி ஹவுஸ் உள்ளிட்ட 10 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவாயில்கள் காலை முதலே மூடப்பட்டிருந்தன. இன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் போராட்டம் 3 மணிக்கு நிறைவடைந்தது.

இதையடுத்து, மூடப்பட்டிருந்த மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இருப்பினும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.