டில்லி,

டில்லி ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 29வது நாளாக நடைபெற்று வருகிறது.

இன்றைய போராட்டத்தில் தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா சந்தித்து அவர்களுடன் அமர்ந்து மண்சோறு சாப்பிட்டு ஆதரவு தெரிவித்தார்.

டில்லியில் விவசாயிகள் நிர்வாணமாக போராடியது ஒவ்வொரு தமிழனுக்கும் தலைகுனிவு என்றார்.

விவசாயிகளுடன் அமர்ந்து மண்சோறு சாப்பிட்டபின், செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது,

தேமுதிக தலைவர்  கேப்டன் ஆலோசனைபடி தான் டில்லி வந்து போராடும் தமிழக விவசாயிகளை சந்தித்து வருவதாக பிரேமலதா விஜயகாந்த கூறினார்.

அப்போது, தமிழ்நாடே உங்களுடன் இருக்கிறது விவசாய சங்கர் தலைவர் அய்யாகண்ணுவிடம் பிரேமலதா தெரிவித்தார்.

மேலும், வாழ்வாதாரத்துக்காக போராடும் விவசாயிகள் தங்களுடைய உணர்வுகளை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் கடந்த 31 நாட்களாக போராடி வருகிறார்கள். அவர்கள் இவ்வளவு கடுமையான போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், தமிழக முதல்வர் இதுவரை அவர்களை சந்திக்காதது வேதனை தருகிறது.

நமது நாடு விவசாயம் சார்ந்த நாடு. நமது பூமியும் விவசாயம் சார்ந்த பூமி தான்,. விவசாயிகளுக்கு ஒரு கஷ்டம் என்றால் அதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று கூறினார்.

பல நாட்களாக இந்த இடத்தில் அரைநிர்வாண போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று முழு நிர்வாண போராட்டம் நடத்தினார்கள்.

இது அவர்களுக்கு தலைகுனிவு அல்ல… ஒவ்வொரு தமிழனுக்கும் தலைகுனிவு என்றார்.

நானும், கேப்டனும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். எனவேதான் நானும் அவர்களோடு இணைந்து மண்சோறு சாப்பிட்டேன்  என்று கூறினார்.

தமிழக விவசாயிகளின் கோரிக்கை குறித்து பிரதமர் மோடி பரிசீலிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டம்போல, விவசாயிகளுக்காக போராட்டம் நடைபெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.