டில்லி,

தலைநகர் டில்லியில் விவசாயிகள் பிரச்சினைகளை வலியுறுத்தி முண்டும்  ஜூலை முதல் வாரம் போராட்டம் தொடங்குவோம் என்று தமிழக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே 41 நாட்கள் டில்லி ஜந்தர்மந்திரில் தமிழக விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்ற நிலையில், தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்பெற்று தமிழகம் திரும்பினர்.

ஆனால், மத்திய மாநில அரசுகள் உறுதியளித்தபடி எந்தவித முயற்சியும் செய்யாத நிலை யில்,  தற்போது மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், வறட்சி நிவாரணத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டில்லியில் 41 நாட்கள் போராட்டம் நடந்தது.

விவசாயிகளின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாததால், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற அகில இந்திய அளவில் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அய்யாக்கண்ணு கூறினார். அதைத்தொடர்ந்து  அனைத்து மாநில விவசாயி சங்கத்தலைவர்களுடன் பேசி, டில்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், கலந்துகொண்ட அனைத்து விவசாய சங்க தலைவர்களின் ஆலோசனையை தொடர்ந்து,  ‘அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு’ என்ற அமைப்பை உருவாக்கப்பட்டது. இதன் தென் மண்டல தலைவராக அய்யாக்கண்ணு நியமிக்கப்பட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடந்தது.  கூட்டம் முடிந்ததும் அய்யாக்கண்ணு  கூறியதாவது:-

இந்தியாவில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து 10 பேர் கொண்ட செயற்குழு அமைத்து இருக்கிறோம். விவசாயிகளுக்கு லாபகரமான விலை, நதிகள் இணைப்பு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 6-ந் தேதி விவசாயிகளின் ஊர்வலம் தொடங்குகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு நாடு முழுவதும் செல்லும்.

டில்லியில் தமிழக விவசாயிகள் ஜூலை முதல் வாரம் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.