டெல்லி:  டெல்லி எல்லையில் நடைபெற்று வரும்  விவசாயிகள் போராட்டம் 44வது நாளாக  தொடர்கிறது.  இன்று  விவசாயிகள் மத்திய அரசு இடையே 8வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. முன்னதாக நேற்று டெல்லி எல்லையில் விவசாயிகள் டிராக்டர் பேரணி ஒத்திகை  நடத்தி மத்தியஅரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள  3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயகிள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா உள்பட வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் ஒரு மாதத்தை கடந்தும் தொடர்கிறது. மழை,குளிரை பொருட்படுத்தாமல் விவசாயிகள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக நின்று போராடி வருகின்றனர். மேலும், தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால்,  டெல்லி ராஜபாதையில் 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பை பிரமாண்டமாக நடத்தப் போவதாக மத்தியஅரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்தியஅரசு, இதுவரை  7 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது உள்ளது. ஆனால்,எந்த முடிவும் எட்டப்படவில்லை.

வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப்பெற்றே ஆக வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில்,  இன்று (8ந்தேதி) 8வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இன்றைய போராட்டத்தில் தீர்வு ஏற்படாவிட்டால், போராட்டம் தீவிரமாகும் என விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.