டெல்லி: நாடு முழுவதும் 500க்கும் அதிகமான விவசாய குழுவினர் உள்ள நிலையில், 32 விவசாய குழுக்களுக்கு மட்டுமே மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளதால், அரசின் பேச்சுவார்தைதை அழைப்பை நிராகரிப்பதாக விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.

‘டெல்லி சலோ’ என்ற பெயரில்  மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இன்று 6-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.  போராட்டத்தில் கலந்துகொள்ள மற்ற மாநிலங்களில் இருந்து டெல்லி வரும் விவசாயிகள்  அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். விவசாயிகள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட்டனர்.  ஆனால், அவர்கள் தடைகளை மீறி டெல்லியை நோக்கி படையெடுத்து வந்தனர்.  தற்போது, டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியில் முகாமிட்டு போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர்

இதையடுத்து, ‘போராட்டத்தை கைவிட்டுவிட்டு, இன்றே (டிசம்பர் 1) பேச்சுவார்த்தைக்கு வரலாம் என மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர்  விவசாய சங்கங்களுக்குஅழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 3 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்யான் பவன் அரங்கில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெறும் என மந்திரி தெரிவித்துள்ளார்.

ஆனால், விவசாயிகள் அமைப்பினர், மத்தியஅரசின் அழைப்பை நிராகரித்து உள்ளனர்.  . இது தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாய சங்க கமிட்டியின் இணை செயலாளர் சுக்விந்தர் சபரான் கூறியதாவது:-

நாட்டில் மொத்தம் 500-க்கும்  அதிகமான விவசாய குழுக்கள் உள்ளன. ஆனால், அரசு பேச்சுவார்த்தை நடத்த 32 விவசாய குழுக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளது. எஞ்சிய விவசாய குழுக்களுக்கு மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அனைத்து விவசாய குழுக்களையும் அழைக்கும் வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடமாட்டோம் என  உறுதியாக தெரிவித்து உள்ளார்.