டில்லி

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் ஃபாஸ்டாக் காலக் கெடு மேலும் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் அதாவது ஜனவரி 15ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோர்,  ஃபாஸ்டாக் உதவியுடன் டோல்கேட்களில்  கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. டிசம்பர் 15ம் தேதிக்குப் பின்  ஃபாஸ்டாக் இல்லாமல் டோல்கேட்களில் பயணம் செய்யும் வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

சுங்கச்சாவடிகள் உள்ள அனைத்து பாதைகளிலும் குறைந்தது 75 சதவிகிதம் ஃபாஸ்டாக் மூலம் மட்டுமே கட்டணத்தை ஏற்க வேண்டும் எனவும் மீதமுள்ள 25 சதவீத பாதைகளில் ஃபாஸ்டாக் மற்றும் வாகன ஓட்டுநர்களிடம் இருந்து நேரடியாகப் பணத்தைப் பெறலாம் என அரசு கூறியது.

ஃபாஸ்டாக்இல் உள்ள சிப்புகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.  அந்த இறக்குமதி முடிவடைய ஆறு வாரங்கள் ஆகும்.  இதனால், ஃபாஸ்டாக் தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு நாளைக்கு சுமார் 30-50,000 ஃபாஸ்டாக்குகளை மட்டுமே விற்பனைக்கு அனுப்ப முடியும் .

சென்ற வார நிலவரப்படி, ஃபாஸ்டாக் இருப்பு 18 லட்சமாக உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடி வாகன ஓட்டிகளுக்குமளிக்க இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று நெடுஞ்சாலை ஆணையம் கருதியது.

எனவே இறக்குமதியில் ஏற்படும் காலதாமதம், குறைவான உற்பத்தியில்  போன்ற காரணங்களுக்காகச்  சந்தையில் ஃபாஸ்டாக் விநியோக பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதையடுத்து, ஃபாஸ்டாக் காலக்கெடு நீட்டிக்க மத்திய அமைச்சகம் அனுமதி அளித்திருக்கிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஃபாஸ்டாக் காலக்கெடுவை நீட்டிக்க அனுமதிக்கும் சுற்றறிக்கையை அரசு வெளியிட்டிருக்கிறது  அதில் சந்தையில் ஃபாஸ்டாக் போதுமான அளவு இல்லை என்பதால், இந்த டிசம்பர் 15ம் தேதி காலக்கெடுவை, தற்போது மேலும் 30 நாட்களுக்கு அதாவது ஜனவரி 15 வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.:என அறிவித்துள்ளது.