சாத்தான்குளம்:
காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை, மகன் சம்பவத்தில் போலீஸார் மீது சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தையதைத் தொடர்ந்து, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், துணை ஆய்வாளர்கள்  உள்பட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.ஆக இருந்த ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது ஐபிசி செக்சன் 302 கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர்கள், தங்களது காவல்துறையை  பணியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடையை திறந்ததாக கூறி காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணை என்ற பெயரில் போலீஸார் கொடூரமாகத் தாக்கியதில் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், அந்த விசாரணை தொடங்கும் வரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது. இறந்தவர்களின் உடற்கூறாய்வு அறிக்கை யின்படி, இந்தச் சம்பவத்தில் போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது எனத் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி ஐஜி சங்கரின் நேரடிக் கண்காணிப்பில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.போலீஸ் துணை கண்காணிப்பாளர் அனில்குமார்,  உடனே திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநபுவைச் சந்தித்து, வழக்குத் தொடர்பான ஆவணங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்கினார்.

வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் சென்று,  காவல்  நிலைய தடயங்களை சேகரித்த தனிப்படை யினர், ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினர் தொடங்கி கோவில்பட்டி கிளைச்சிறை வரை பல்வேறு இடங்களில் விசாரித்தனர்.
சாத்தான்குளம் பஜாரில் உள்ள சிசிடிவி காட்சிகள் என அனைத்து தடயங்களையும் சேகரித்தன இந்நிலையில் சிபிசிஐடி போலீஸார் 12 குழுக்களாப் பிரிந்து வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி னர்.

டிஎஸ்பிக்கள் அனில்குமார், முரளிதரன், ஆய்வாளர்கள் பிறைச்சந்திரன், உலகராணி, சரவணக் குமார் ஆகியோர் தலைமையில் 5 குழுவினர் சாத்தான்குளத்தில் முகாமிட்டு காவல் நிலையம், மருத்துவமனை, ஜெயராஜின் கடை இருந்த பகுதி, அவர்களது வீடு உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தினர்.
மேலும், இந்த வழக்குத் தொடர்பான பல்வேறு தடயங்களைச் சேகரித்தனர். இதேபோல் சிறப்பு உதவி ஆய்வாளர் சேவியர் தலைமையில் ஒரு குழுவினர் கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்துக்குச் சென்று இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை நகல்களைச் சமர்ப்பித்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று மாலை சிபிசிஐடி ஐஜி சங்கர் மற்றும் எஸ்.பி. விஜயகுமார் ஆகியோர் சாத்தான்குளத்துக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினர்.  இதையடுத்து, கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் அடிப்படையில், முதல்தகவல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டது.
முதல் தகவல் அறிக்கையில், இரண்டு பிரிவுகள் திருத்தம் செய்யப்பட்டு சட்டப்பிரிவு 302 கொலை முயற்சி வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. நேற்று இரவே  எஸ்.ஐ. ரகுகணேஷ்  சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து இன்று  காலை மற்றொரு எஸ்ஐ பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்து ராஜ் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் சாத்தான் குளம் ஆய்வாளராக இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஸ்ரீதர் கங்கை கொண்டான் வழியாக காரில் தப்பிச்சென்றபோது அவரையும்  சிபிசிஐடி போலீஸார் மறித்து இன்று காலை கைது செய்தனர்.