டில்லி:

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம்  கடத்தப்பட்ட பாதிரியார் உழுனாலில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது மஸ்கட்டை வந்தடைந்திருப்பதால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவரது விடுதலையை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். ஓமன் நகரில் அன்னை தெரசா அமைப்பினரால் நடத்தப்படும் முதியோர் இல்லத்தில் சேவை புரிந்த கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பாதிரியார் டோம் உழுனானில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டார்.

கடந்த 18 மாதங்களாக தன்னை மீட்க நடவடிக்கை எடுக்க இந்திய அரசை பல முறை அவர் கேட்டுக் கொண்டார். கடந்த மே மாதத்தில் இது தொடர்பான வீடியா வெளியிடப்பட்டது. அதில், ‘‘ என்னை அவர்கள் நல்ல முறையில் நடத்துகிறார்கள். எனது உடல் நிலை மோசமாகி வருகிறது. எனக்கு மருத்துவ உதவி விரைந்து தேவைப்படுகிறது’’ என்று தெரிவித்திருந்தார்.

என்னை மீட்க குடும்பத்தினர் உரிய நடவடிக்கை எடுங்கள். இதற்கு கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு’’ என்று தெரிவித்திருந்தார். கடந்த டிசம்பரில் வெளியான வீடியோவில் தன்னை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கடந்த மே 30ம் தேதி இவரது உறவினர்கள் கேரளா கவர்னர் நீதிபதி சதாசிவத்தை சந்தித்து உதவி கோரினர். பாதிரியாரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கு வலியுறுத்துமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். அவர்களது உறவினர்களோடு முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும் சென்றிருந்தார்.

தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. பயங்கரவாதிகள் அவரை மஸ்கட்டில் விட்டுச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

ஆனால், பாதிரியார் விடுதலைக்கு இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வாட்டிகன்  நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டிருப்பதை ஓமன்அரசு தெரிவித்துள்ளது.