னாஜி

கோவா மக்களவை தொகுதியில் சோதனை வாக்கெடுப்பு நடந்த போது பாஜகவுக்கு 9 வாக்குகள் பதியப்பட்டபோது அது 17 ஆக பதிந்துள்ளது.

 

நடைபெற்று வரும் மக்களவை தேர்த்லில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயனபடுத்தப் பட்டு வருகின்றன. வாக்கெடுப்பின் போது வாக்குச் சாவடியில் சோதனைக்காக ஒவ்வொரு வேட்பாளரையும் வாக்குப் பதியச் சொல்லி சரி பார்ப்பது வழக்கம். அதன் பிறகு அந்த வாக்குகள் நீக்கப்பட்டு வாக்காளர்கள் உபயோகத்துக்கு இயந்திரங்கள் அளிக்கப்படும்.

கோவா மாநிலத்தில் வாக்குச் சாவடி எண் 31 மற்றும் 34ல் அவ்வாறு சோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த சோதனையில் 6 வேட்பாளர்களுக்கு தலா 9 வாக்குகள் வீதம் அளிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை சோதிக்கபட்டது. அந்த சோதனை முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஒவ்வொரு கட்சிக்கும் 9 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் பாஜகவுக்கு 17, காங்கிர்சுக்கு 9, ஆம் ஆத்மி 8, மற்றும் சுயேச்சைக்கு 1 என பதிவாகி உள்ளது. இந்த தகவலை கோவா மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் எல்விஸ் கோம்ஸ் தனது டிவிட்டரில் பதிந்துள்ளார்.

அவர் தனது பதிவில், “அவமானமூட்டும் தேர்தல். வாக்குச் சாவடி எண் 31 மற்றும் 34 இல் சோதனை வாக்களிப்பில் ஆறு வேட்பாளர்களுக்கும் தலா 9 வாக்குகள் பதியப்பட்டது. ஆனால் எண்ணிக்கையில் பாஜக 17, காங்கிரஸ் 9, ஆம் ஆத்மி 8 மற்றும் சுயேச்சை என பதிவாகி உள்ளது. திருட்டுத்தனம்” என பதிந்துள்ளார்.

 

இது குறித்து கோவா தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையம் இந்த இரு வாக்குச் சாவடிகளிலும் இருந்த அனைத்து மின்னணு வாக்கு இயந்திரங்களையும் முழுவதுமாக மாற்றி விட்டது என அறிவித்துள்ளார்.

இத்தகைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த புகார்கள் கோவாவில் மட்டுமின்றி கர்நாடகா மற்றும் கேரளாவிலும் வந்துள்ளன. அங்கும் மின்னணு இயந்திரங்கள் அதன் பிறகு மாற்றப்பட்டுள்ளன.

குறிப்பாக கேரளாவில் கை சின்னத்தைஅழுத்திய போது தாமரை சின்னம் வாக்கு ஒப்புகை இயந்திரந்த்தில் தெரிந்ததாக ஒருவர் டிவிட்டரில் பதிந்துள்ளார். அத்துடன் பழுதடைந்த இயந்திரங்கள் எப்படி பாஜகவுக்கு ஆதரவாகவே பழுதாகின்றன என கேள்வி எழுப்பி உள்ளார்.