மலையாள இயக்குநர் பாசில் தமிழில் பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, காதலுக்கு மரியாதை போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.

தன் மகன் பகத்தை சினிமாவில் நடிக்க அனுமதித்தார். ஆனால் பகத் நடித்த முதல் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எனினும் அவர் நடித்த சில படங்களில் நல்ல நடிப்பை கொடுத்திருந்தார்.

மேல்படிப்புக்கு அமெரிக்க சென்ற பகத் மீண்டும் தாயகம் திரும்பி உள்ளார்.

இப்போது பகத், ஜிஜோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை யடுத்து அவர் ‘மலையகுஞ்சன்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

பகத் நடித்த படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய சாஜிமோன் பிரபாகர், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தை தயாரிப்பது, பகத்தின் தந்தையும், இயக்குநருமான பாசில்.

“படத்தின் கதையை கேட்டேன். மிகவும் பிடித்திருந்தது. இதனால் நானே தயாரிக்க முடிவு செய்தேன்” என்ற பாசிலிடம் ‘என்ன ஆயிற்று டைரக்‌ஷன் ?’ என கேட்டபோது சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.

“என் மகன் நடிக்கும் படத்தை தொடர்ந்து வேறு சில படங்களையும் தயாரிக்க உள்ளேன். மீண்டும் டைரக்ட் செய்ய ஆசையாக உள்ளது, சரியான கதைக்காக காத்திருக்கிறேன். பொருத்தமான கதை கிடைத்தால் உடனடியாக ஷுட்டிங் போய்விடுவேன்”

– பா. பாரதி