காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் உள்ள அத்திவரதர் சிலையை வெளியே கொண்டு வருவதற்காக குளத்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்திவரதர் விழா வருகிற ஜூலை 1ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு முன்பு கடந்த 1979ம் ஆண்டு இந்த விழா நடந்தது. இப்போது 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழா நடைபெற உள்ளது. விழாவில் அத்திவரதர் 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும், 24 நாட்கள் சயன கோலத்திலும், பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளையும், குடிநீர், கழிவறைகள், சுகாதார வசதிகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் பொன்னையா முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கான ஆலோசனை கூட்டத்தை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா கூட்டினார். இதில் தமிழக அறநிலையத்துறை முதன்மை செயலாளர் பணீந்தர ரெட்டி, மாவட்ட வருவாய் அதிகாரி சுந்தரமூர்த்தி, வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் மகேந்திரன் மற்றும் இதர அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் விழா ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் கோபுரம் உள்ளது. அந்த கோபுரத்தின் கீழே தான் அத்திவரதர் சிலை உள்ளது. அந்த குளத்தில் இருந்து அத்தி மரத்தால் ஆன அத்திவரதரை வெளியே எடுக்க உள்ளனர். அதற்கு முன்பாக குளத்தில் உள்ள நீரை வெளியேற்ற உள்ளனர். இதற்காக மின் மோட்டார் எந்திரங்கள், குழாய்கள் கோவிலுக்கு வந்துள்ளன. விரைவில் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீர் இதன்மூலம் வெளியேற்றப்படும். அதன்பின்னர் சிலை வெளியே கொண்டு வரப்படும்.