புதுடெல்லி: இந்தியாவில் நடக்கவுள்ள 17 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மீண்டும் ஒத்திவைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஃபிஃபா நடத்தும் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து(17 வயது) இந்தியாவில், இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக இத்தொடர் அடுத்தாண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் மற்றும் வீராங்கனைகளுக்கான பயிற்சி நடவடிக்கைகள் போன்றவை இன்னும் துவங்கவில்லை.

எனவே, இதன்காரணமாக இத்தொடர் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. “உலகக்கோப்பை பெண்கள் (17 வயது) கால்பந்து தொடர் குறித்து அதிகாரப்பூர்வ புதிய செய்தி எதுவும் வரவில்லை” என்றார் அகில இந்திய கால்பந்து சங்கப் பொதுச்செயலாளர்.