விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மீனவ கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

மரக்காணம் அருகே கைப்பானிக்குப்பம் மீனவ கிராமத்தில், தற்போதுள்ள கிராம தலைவர் மனோகரன் என்பவருக்கும், முன்னாள் கிராம தலைவர் ஏழுமலை என்பவருக்கும் இடையே பணத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் மனோகரன் தரப்பினர் 20க்கும் மேற்பட்டோர், முன்னாள் தலைவர் ஏழுமலையின் ஆதரவாளர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கியதோடு, இருசக்கர வாகனங்கள், படகு எஞ்சின்களையும் சேதப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்த தாக்குதலில் ஏழுமலை உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் பதற்றமான சூழல் நிலவுவதால் கைப்பானிக்குப்பம் கிராமத்தில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.