ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பேர் இறந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ராணுவம் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. எப்.ஐ.ஆர்ரில் ராணுவ அதிகாரியின் பெயரை நீக்கிவிட்டு புதிதாக பெயரை குறிப்பிடாமல் வேறு ஒரு எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என பாஜக எம்எல்ஏ.க்கள் வலியுறுத்தினர்.

இதற்கு மெகபூபா முப்தி சட்டசபையில் பதில் கூறுகையில், ‘‘துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசினேன். கவனக்குறைவாகவோ அல்லது தவறுதலாக நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்தே வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் நீதிபதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.