கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு ஏதுமில்லாமல் சமூகவலைத்தளத்தில் பெரும்பாலான நேரத்தை கழித்து வருகின்றனர் திரையுலகினர் . அந்த வகையில் நேரலையில் தமன்னா அளித்துள்ள பேட்டியில் தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் குறித்துபேசியுள்ளார்.
“தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் நான் ஆச்சர்யப்படும் விஷயம், அவர்களைப் பொறுத்தவரை திரைப்படங்கள் அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கம் வகிக்கின்றன. அவர் அவர்களது கலாசாரத்தின் ஒரு பகுதியாக, அவர்களது வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒரு விஷயமாக சினிமா உள்ளது. ‘வீரம்’தான் அஜித் சாருடன் எனக்கு முதல் படம். மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியாக அமைந்த படம் அது. அது ஒரு கமர்ஷியல் படமாக இருந்தாலும் ஒரு நடிகையாக எனக்கு நடிக்க அதிக சந்தர்ப்பங்களை வழங்கிய படம். எனக்குத் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம்.
விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். நம் தலைமுறை மட்டுமல்லாது இனி வரப்போகிற தலைமுறைகளையும் மகிழ்விக்கும் நடிகர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். இருவருக்குமே அற்புதமாம ரசிகர் கூட்டம் உள்ளது. தொடர்ந்து அந்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.