டில்லி:

யோத்தி சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி நிலம் தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை  வரும் 17ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து,  அயோத்திப் பகுதியில், டிசம்பர் 10 ம் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் “ராமஜென்ம பூமி” என கூறப்படும் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதி மன்றத்தில், சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லாலா ஆகியவை வழக்கு தொடர்ந்திருந்தன. வழக்கின் தீர்ப்பில், சர்ச்சைக்குரிய இடத்தை,  தங்களுக்குள் சரிசமமாக மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என கடந்த 2010 ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அயோத்தி நிலம் தொடர்பான மேல்முறையீடு  வழக்கை உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.  உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 6ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. உச்சநீதி மன்றத்தில் தினசரி விசாரணை நடைபெற்று வரும் இந்த வழக்கில் தற்போது இறுதிக்கட்ட விசாரணை தொடங்கி உள்ளது.

இந்த வழக்கில், வழக்கு தொடர்ந்துள்ள சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லாலா  அமைப்பினர் சார்பாக,  தங்களது  வாதங்களை வாதங்களை அக்டோபர் 18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி,  அக்டோபர் 17ம்தேதிக்குள் வழக்கின் இறுதி விசாரணை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது.

தற்போது இந்த வழக்கில்  இறுதிக்கட்ட வாதம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு கூறப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நாடு முழுவதும் அயோத்தி தீர்ப்பை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனையடுத்து அயோத்தியில் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில், உச்சநீதிமன்றம், இந்து-முஸ்லீம் மதத்தினரிடையே சுமூகமான உறவை ஏற்படுத்தும் வகையில்,   மத்தியஸ்தர் குழு அமைத்து விசாரணை நடத்தியது.. ஆனால் இந்த வழக்கில் மத்தியஸ்த முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.