புதுடெல்லி: ராதாபுரம் தொகுதியில் நடைபெறும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைக்கோரி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை தொடர்ந்த வழக்கில், இறுதி விசாரணையை டிசம்பர் 11ம் தேதி ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாகவும், தபால் ஓட்டுகள் எண்ணப்படவில்லை என்றும் வெறும் 49 வாக்குகளில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் அப்பாவு, 19, 20 மற்றும் 21 சுற்றுகள் மற்றும் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டுமென கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அப்பாவுவின் கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம் அவ்வாறே உத்தரவிட்டது சில ஆண்டுகள் கழித்து. ஆனால், இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் இன்பதுரை. ஆனால், மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட மட்டும் இடைக்கால தடை விதித்தது.

தற்போது, அதுதொடர்பான வழக்கின் இறுதி விசாரணை டிசம்பர் 11ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. சட்டமன்றத்தில் பதவிகாலம் முடிவடைய இன்னும் 1.5 ஆண்டுகளே இருக்கும் நிலையில் இந்த வழக்கை நீதிமன்றங்கள் துரிதமாக விசாரிக்காத நிலையே ஏற்படுகிறது.